பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஆனந்த மாலை
வ.எண் பாடல்
1

மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார், வியன் உலகம்;
பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார், அமரர் எல்லாம்;
கல் நேர் அனைய மனக் கடையாய், கழிப்புண்டு, அவலக் கடல் வீழ்ந்த
என் நேர் அனையேன், இனி, உன்னைக் கூடும்வண்ணம் இயம்பாயே.

2

என்னால் அறியாப் பதம் தந்தாய்; யான் அது அறியாதே கெட்டேன்;
உன்னால் ஒன்றும் குறைவு இல்லை; உடையாய், அடிமைக்கு யார்? என்பேன்:
பல் நாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியரொடும் கூடாது,
என் நாயகமே! பிற்பட்டு, இங்கு, இருந்தேன் நோய்க்கு விருந்தாயே.

3

சீலம் இன்றி, நோன்பு இன்றி, செறிவே இன்றி, அறிவு இன்றி,
தோலின் பாவைக் கூத்தாட்டு ஆய், சுழன்று, விழுந்து, கிடப்பேனை
மாலும் காட்டி, வழி காட்டி, வாரா உலக நெறி ஏற,
கோலம் காட்டி, ஆண்டானை, கொடியேன் என்றோ கூடுவதே?

4

கெடுவேன்; கெடுமா கெடுகின்றேன்; கேடு இலாதாய், பழி கொண்டாய்;
படுவேன், படுவது எல்லாம், நான் பட்டால், பின்னைப் பயன் என்னே?
கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குருமணியே,
நடு ஆய் நில்லாது ஒழிந்தக்கால், நன்றோ, எங்கள் நாயகமே?

5

தாய் ஆய் முலையைத் தருவானே, தாராது ஒழிந்தால், சவலையாய்
நாயேன் கழிந்து போவேனோ? நம்பி, இனித்தான் நல்குதியே;
தாயே என்று உன் தாள் அடைந்தேன்; தயா, நீ, என்பால் இல்லையே?
நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய்; நான் தான் வேண்டாவோ?

6

கோவே, அருள வேண்டாவோ? கொடியேன் கெடவே அமையுமே?
ஆ! ஆ! என்னாவிடில், என்னை அஞ்சேல் என்பார் ஆரோ தன்?
சாவார் எல்லாம் என் அளவோ? தக்க ஆறு அன்று என்னாரோ?
தேவே! தில்லை நடம் ஆடீ! திகைத்தேன்; இனித்தான் தேற்றாயே!

7

நரியைக் குதிரைப் பரி ஆக்கி, ஞாலம் எல்லாம் நிகழ்வித்து,
பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு அது ஏற்றும் பெருந்துறையாய்!
அரிய பொருளே! அவிநாசி அப்பா! பாண்டி வெள்ளமே!
தெரிய அரிய பரஞ்சோதீ! செய்வது ஒன்றும் அறியேனே!