பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருஅண்டப் பகுதி
வ.எண் பாடல்
1-6

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்,
அளப்புஅரும் தன்மை, வளப் பெரும் காட்சி
ஒன்றனுக்கு ஒன்று நின்ற எழில் பகரின்
நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன;
இல் நுழை கதிரின் துன் அணுப் புரைய,
சிறிய ஆகப் பெரியோன். தெரியின்

7-12

வேதியன் தொகையொடு மால் அவன் மிகுதியும்,
தோற்றமும், சிறப்பும், ஈற்றொடு புணரிய
மாப் பேர் ஊழியும், நீக்கமும், நிலையும்,
சூக்கமொடு, தூலத்து, சூறை மாருதத்து
எறியது வளியின்
கொட்கப் பெயர்க்கும் குழகன்:

13-28

முழுவதும்
படைப்போன் படைக்கும் பழையோன்; படைத்தவை
காப்போன் காக்கும் கடவுள்; காப்பவை
கரப்போன்; கரப்பவை கருதாக்
கருத்துடைக் கடவுள்; திருத்தகும்
அறுவகைச் சமயத்து அறுவகையோர்க்கும்
வீடு பேறு ஆய், நின்ற விண்ணோர் பகுதி
கீடம் புரையும் கிழவோன்; நாள்தொறும்
அருக்கனில் சோதி அமைத்தோன்; திருத்தகு
மதியில் தண்மை வைத்தோன்; திண் திறல்
தீயில் வெம்மை செய்தோன்; பொய் தீர்
வானில் கலப்பு வைத்தோன்; மேதகு
காலில் ஊக்கம் கண்டோன்; நிழல் திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன்; வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று,
எனைப் பல கோடி, எனைப் பல பிறவும்,
அனைத்துஅனைத்து, அவ்வயின் அடைத்தோன். அஃதான்று

29-35

முன்னோன் காண்க! முழுதோன் காண்க!
தன் நேர் இல்லோன் தானே காண்க!
ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க!
கானப் புலி உரி அரையோன் காண்க!
நீற்றோன் காண்க! நினைதொறும், நினைதொறும்,
ஆற்றேன் காண்க! அந்தோ! கெடுவேன்!
இன் இசை வீணையில் இசைந்தோன் காண்க!

36-45

அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!
பரமன் காண்க! பழையோன் காண்க!
பிரமன், மால், காணாப் பெரியோன் காண்க!
அற்புதன் காண்க! அநேகன் காண்க!
சொல் பதம் கடந்த தொல்லோன் காண்க!
சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க!
பத்தி வலையில் படுவோன் காண்க!
ஒருவன் என்னும் ஒருவன் காண்க!
விரி பொழில் முழுதாய் விரிந்தோன் காண்க!
அணுத் தரும் தன்மையில் ஐயோன் காண்க!

46-55

இணைப்பு அரும் பெருமையில் ஈசன் காண்க!
அரியதில் அரிய அரியோன் காண்க!
மருவி எப் பொருளும் வளர்ப்போன் காண்க!
நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க!
மேலொடு, கீழாய், விரிந்தோன் காண்க!
அந்தமும், ஆதியும், அகன்றோன் காண்க!
பந்தமும், வீடும், படைப்போன் காண்க!
நிற்பதும், செல்வதும், ஆனோன் காண்க!
கற்பமும், இறுதியும், கண்டோன் காண்க!
யாவரும் பெற உறும் ஈசன் காண்க!

56-65

தேவரும் அறியாச் சிவனே காண்க!
பெண், ஆண், அலி, எனும் பெற்றியன் காண்க!
கண்ணால் யானும் கண்டேன் காண்க!
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க!
கருணையின் பெருமை கண்டேன் காண்க!
புவனியில் சேவடி தீண்டினன் காண்க!
சிவன் என யானும் தேறினன் காண்க!
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க!
குவளைக் கண்ணி கூறன் காண்க!
அவளும், தானும், உடனே காண்க!

66-74

பரம ஆனந்தப் பழம் கடல் அதுவே
கரு மா முகிலின் தோன்றி,
திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி,
திருத்தகு மின் ஒளி திசை திசை விரிய,
ஐம் புலப் பந்தனை வாள் அரவு இரிய,
வெம் துயர்க் கோடை மாத் தலை கரப்ப,
நீடு எழில் தோன்றி, வாள் ஒளி மிளிர,
எம் தம் பிறவியில் கோபம் மிகுத்து,
முரசு எறிந்து, மாப் பெரும் கருணையின் முழங்கி,

75-89

பூப் புரை அஞ்சலி காந்தள் காட்ட,
எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள,
செம் சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட, வரை உறக்
கேதக் குட்டம் கையற ஓங்கி,
இரு முச் சமயத்து ஒரு பேய்த்தேரினை,
நீர் நசை தரவரும், நெடும் கண், மான் கணம்
தவப் பெரு வாயிடைப் பருகி, தளர்வொடும்,
அவப் பெரும் தாபம் நீங்காது அசைந்தன;
ஆயிடை, வானப் பேர் யாற்று அகவயின்
பாய்ந்து எழுந்து, இன்பப் பெரும் சுழி கொழித்து,
சுழித்து, எம் பந்த மாக் கரை பொருது, அலைத்து, இடித்து,
ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்
இரு வினை மா மரம் வேர் பறித்து, எழுந்து
உருவ, அருள் நீர் ஓட்டா, அரு வரைச்
சந்தின் வான் சிறை கட்டி, மட்டு அவிழ்

90-114

வெறி மலர்க் குளவாய் கோலி, நிறை அகில்
மாப் புகைக் கரை சேர் வண்டு உடைக் குளத்தின்
மீக்கொள, மேல் மேல் மகிழ்தலின், நோக்கி,
அருச்சனை வயலுள் அன்பு வித்து இட்டு,
தொண்ட உழவர் ஆரத் தந்த
அண்டத்து அரும் பெறல் மேகன், வாழ்க!
கரும் பணக் கச்சைக் கடவுள், வாழ்க!
அரும் தவர்க்கு அருளும் ஆதி, வாழ்க!
அச்சம் தவிர்த்த சேவகன், வாழ்க!
நிச்சலும் ஈர்த்து ஆட்கொள்வோன், வாழ்க!
சூழ் இரும் துன்பம் துடைப்போன், வாழ்க!
எய்தினர்க்கு ஆர் அமுது அளிப்போன், வாழ்க!
கூர் இருள் கூத்தொடு குனிப்போன், வாழ்க!
பேர் அமைத் தோளி காதலன், வாழ்க!
ஏதிலர்க்கு ஏதில் எம் இறைவன், வாழ்க!
காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு, வாழ்க!
நச்சு அரவு ஆட்டிய நம்பன், போற்றி!
பிச்சு எமை ஏற்றிய பெரியோன், போற்றி!
நீற்றொடு தோற்ற வல்லோன், போற்றி நால் திசை
நடப்பன நடாஅய், கிடப்பன கிடாஅய்,
நிற்பன நிறீஇ,சொல் பதம் கடந்த தொல்லோன்;
உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படாஅன்;
கண் முதல் புலனால் காட்சியும் இல்லோன்;
விண் முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்;

115-123

பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும்
ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை;
இன்று எனக்கு எளிவந்து, அருளி,
அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள்;
இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி!
அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி!
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!
ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய,
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்:

124-145

மரகதக் குவாஅல், மா மணிப் பிறக்கம்,
மின் ஒளி கொண்ட பொன் ஒளி திகழ,
திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்;
முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்;
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த, உறைப்பவர்க்கு ஒளித்தும்;
மறைத் திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும்;
இத் தந்திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு,
அத் தந்திரத்தில், அவ்வயின், ஒளித்தும்;
முனிவு அற நோக்கி, நனி வரக் கௌவி,
ஆண் எனத் தோன்றி, அலி எனப் பெயர்ந்து,
வாள் நுதல் பெண் என ஒளித்தும்; சேண் வயின்,
ஐம் புலன் செல விடுத்து, அரு வரைதொறும் போய்,
துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை
அரும் தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்;
ஒன்று உண்டு, இல்லை, என்ற அறிவு ஒளித்தும்;
பண்டே பயில்தொறும், இன்றே பயில்தொறும்,
ஒளிக்கும் சோரனைக் கண்டனம்;
ஆர்மின்! ஆர்மின்! நாள் மலர்ப் பிணையலில்
தாள் தளை இடுமின்!
சுற்றுமின்! சூழ்மின்! தொடர்மின்! விடேன்மின்!
பற்றுமின்! என்றவர் பற்று முற்று ஒளித்தும்;

146-162

தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை
என் நேர் அனையார் கேட்க வந்து இயம்பி,
அறை கூவி, ஆட்கொண்டருளி,
மறையோர் கோலம் காட்டி அருளலும்;
உலையா அன்பு என்பு உருக, ஓலம் இட்டு,
அலை கடல் திரையின் ஆர்த்து ஆர்த்து ஓங்கி,
தலை தடுமாறா வீழ்ந்து, புரண்டு அலறி,
பித்தரின் மயங்கி, மத்தரின் மதித்து,
நாட்டவர் மருளவும், கேட்டவர் வியப்பவும்,
கடக் களிறு ஏற்றாத் தடப் பெரு மதத்தின்
ஆற்றேன் ஆக, அவயவம் சுவைதரு
கோல் தேன் கொண்டு செய்தனன்;
ஏற்றார் மூதூர் எழில் நகை எரியின்
வீழ்வித்தாங்கு, அன்று,
அருள் பெரும் தீயின் அடியோம் அடிக் குடில்
ஒருத்தரும் வழாமை ஒடுக்கினன்;
தடக் கையின் நெல்லிக்கனி எனக்கு ஆயினன்:

163-182

சொல்லுவது அறியேன்; வாழி! முறையோ?
தரியேன் நாயேன்; தான் எனைச் செய்தது
தெரியேன்; ஆ! ஆ! செத்தேன்; அடியேற்கு
அருளியது அறியேன்; பருகியும் ஆரேன்;
விழுங்கியும் ஒல்லகில்லேன்:
செழும், தண் பால் கடல் திரை புரைவித்து,
உவாக் கடல் நள்ளும் நீர் உள் அகம் ததும்ப,
வாக்கு இறந்து, அமுதம், மயிர்க்கால்தோறும்,
தேக்கிடச் செய்தனன்; கொடியேன் ஊன் தழை
குரம்பைதோறும், நாய் உடல் அகத்தே
குரம்பு கொண்டு, இன் தேன் பாய்த்தினன்; நிரம்பிய
அற்புதமான அமுத தாரைகள்,
எற்புத் துளைதொறும், ஏற்றினன்; உருகுவது
உள்ளம் கொண்டு ஓர் உருச் செய்தாங்கு, எனக்கு
அள்ளூறு ஆக்கை அமைத்தனன்; ஒள்ளிய
கன்னல் கனி தேர் களிறு என, கடைமுறை
என்னையும் இருப்பது ஆக்கினன்; என்னில்
கருணை வான்றேன் கலக்க
அருளொது பரவமு தாக்கினன்
பிரமன்மால் அரியாப் பெற்ரி யோனே.