பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம் பாட, மாநடம் ஆடும் பரமனார்; வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ் மாட மா மதில் சூழ் வன்னியூரரே.
செங்கண் நாகம் அரையது; தீத்திரள் அங்கை ஏந்தி நின்றார்; எரி ஆடுவர்; கங்கை வார்சடைமேல் இடம் கொண்டவர்; மங்கை பாகம் வைத்தார்-வன்னியூரரே.
ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்; தானம் காட்டுவர், தம் அடைந்தார்க்கு எலாம்; தானம் காட்டி, தம் தாள் அடைந்தார்கட்கு வானம் காட்டுவர்போல்-வன்னியூரரே.
இம்மை, அம்மை, என இரண்டும்(ம்) இவை மெய்ம்மை தான் அறியாது விளம்புவர்; மெய்ம்மையால் நினைவார்கள் தம் வல்வினை- வம்மின்!-தீர்ப்பர் கண்டீர், வன்னியூரரே.
பிறை கொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர் நிறையைக் கொள்பவர்; நீறு அணி மேனியர்; கறை கொள் கண்டத்தர்; வெண் மழுவாளினர்; மறை கொள் வாய்மொழியார்-வன்னியூரரே.
திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்; துளைக்கை வேழத்தர்; தோலர்; சுடர் மதி முளைக்கும் மூரல் கதிர் கண்டு, நாகம், நா வளைக்கும் வார்சடையார்-வன்னியூரரே.
குணம் கொள், தோள்,-எட்டு,-மூர்த்தி இணை அடி இணங்குவார் கட்கு இனியனும் ஆய் நின்றான்; வணங்கி மா மலர் கொண்டவர், வைகலும் வணங்குவார் மனத்தார்-வன்னியூரரே.
இயலும் மாலொடு நான்முகன் செய் தவம் முயலின் காண்பு அரிது ஆய் நின்ற மூர்த்திதான்- அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே.
* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.
நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா, விலங்கல் கோத்து, எடுத்தான் அது மிக்கிட, இலங்கை மன்னன் இருபது தோளினை மலங்க ஊன்றி வைத்தார்-வன்னியூரரே.