பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவன்னியூர்
வ.எண் பாடல்
1

காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம்
பாட, மாநடம் ஆடும் பரமனார்;
வாட, மான் நிறம் கொள்வர்-மணம் கமழ்
மாட மா மதில் சூழ் வன்னியூரரே.

2

செங்கண் நாகம் அரையது; தீத்திரள்
அங்கை ஏந்தி நின்றார்; எரி ஆடுவர்;
கங்கை வார்சடைமேல் இடம் கொண்டவர்;
மங்கை பாகம் வைத்தார்-வன்னியூரரே.

3

ஞானம் காட்டுவர்; நன்நெறி காட்டுவர்;
தானம் காட்டுவர், தம் அடைந்தார்க்கு எலாம்;
தானம் காட்டி, தம் தாள் அடைந்தார்கட்கு
வானம் காட்டுவர்போல்-வன்னியூரரே.

4

இம்மை, அம்மை, என இரண்டும்(ம்) இவை
மெய்ம்மை தான் அறியாது விளம்புவர்;
மெய்ம்மையால் நினைவார்கள் தம் வல்வினை-
வம்மின்!-தீர்ப்பர் கண்டீர், வன்னியூரரே.

5

பிறை கொள் வாள்நுதல் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர்; நீறு அணி மேனியர்;
கறை கொள் கண்டத்தர்; வெண் மழுவாளினர்;
மறை கொள் வாய்மொழியார்-வன்னியூரரே.

6

திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்;
துளைக்கை வேழத்தர்; தோலர்; சுடர் மதி
முளைக்கும் மூரல் கதிர் கண்டு, நாகம், நா
வளைக்கும் வார்சடையார்-வன்னியூரரே.

7

குணம் கொள், தோள்,-எட்டு,-மூர்த்தி இணை அடி
இணங்குவார் கட்கு இனியனும் ஆய் நின்றான்;
வணங்கி மா மலர் கொண்டவர், வைகலும்
வணங்குவார் மனத்தார்-வன்னியூரரே.

8

இயலும் மாலொடு நான்முகன் செய் தவம்
முயலின் காண்பு அரிது ஆய் நின்ற மூர்த்திதான்-
அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை
வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா,
விலங்கல் கோத்து, எடுத்தான் அது மிக்கிட,
இலங்கை மன்னன் இருபது தோளினை
மலங்க ஊன்றி வைத்தார்-வன்னியூரரே.