பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருத்தோணிபுரம்
வ.எண் பாடல்
1

மாது இயன்று மனைக்கு இரு! என்றக்கால்,
நீதிதான் சொல நீ எனக்கு ஆர்? எனும்;
சோதி ஆர்தரு தோணிபுரவர்க்குத்
தாதி ஆவன், நான் என்னும்-என் தையலே.

2

நக்கம் வந்து பலி இடு! என்றார்க்கு, இட்டம்
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல்-தோணிபுரவர்க்கு
தக்கது அன்று, தமது பெருமைக்கே.

3

கெண்டை போல் நயனத்து இமவான் மகள்
வண்டு வார்குழலாள் உடன் ஆகவே,
துண்டவான்பிறைத் தோணிபுரவரைக்
கண்டு காமுறுகின்றனள், கன்னியே.

4

பாலையாழ் மொழியாள் அவள் தாழ்சடை-
மேலள் ஆவது கண்டனள்; விண் உறச்
சோலை ஆர்தரு தோணிபுரவர்க்குச்
சால நல்லள் ஆகின்றனள்-தையலே.

5

பண்ணின் நேர் மொழியாள், பலி இட்ட இப்
பெண்ணை, மால்கொடு பெய்வளை கொள்வது,
சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை
அண்ணலாருக்குச் சால அழகிதே?

6

முல்லை வெண் நகை மொய்குழலாய்! உனக்கு
அல்லன் ஆவது அறிந்திலை, நீ; கனித்
தொல்லை ஆர் பொழில்-தோணிபுரவர்க்கே
நல்லை ஆயிடுகின்றனை-நங்கையே!

7

ஒன்றுதான் அறியார், உலகத்தவர்;
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர்;
துன்று வார் பொழில்-தோணிபுரவர்தம்
கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே.

8

உறவு பேய்க்கணம்; உண்பது வெண்தலை;
உறைவது ஈமம்; உடலில் ஓர் பெண் கொடி;
துறைகள் ஆர் கடல்-தோணிபுரத்து உறை
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே?

9

மாக யானை மருப்பு ஏர் முலையினர்
போக, யானும் அவள் புக்கதே புக,
தோகை சேர்தரு தோணிபுரவர்க்கே
ஆக, யானும் அவர்க்கு-இனி ஆள் அதே.

10

இட்டம் ஆயின செய்வாள், என் பெண் கொடி-
கட்டம் பேசிய கார் அரக்கன் தனைத்
துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை
அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே.