பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மாது இயன்று மனைக்கு இரு! என்றக்கால், நீதிதான் சொல நீ எனக்கு ஆர்? எனும்; சோதி ஆர்தரு தோணிபுரவர்க்குத் தாதி ஆவன், நான் என்னும்-என் தையலே.
நக்கம் வந்து பலி இடு! என்றார்க்கு, இட்டம் மிக்க தையலை வெள்வளை கொள்வது தொக்க நீர்வயல்-தோணிபுரவர்க்கு தக்கது அன்று, தமது பெருமைக்கே.
கெண்டை போல் நயனத்து இமவான் மகள் வண்டு வார்குழலாள் உடன் ஆகவே, துண்டவான்பிறைத் தோணிபுரவரைக் கண்டு காமுறுகின்றனள், கன்னியே.
பாலையாழ் மொழியாள் அவள் தாழ்சடை- மேலள் ஆவது கண்டனள்; விண் உறச் சோலை ஆர்தரு தோணிபுரவர்க்குச் சால நல்லள் ஆகின்றனள்-தையலே.
பண்ணின் நேர் மொழியாள், பலி இட்ட இப் பெண்ணை, மால்கொடு பெய்வளை கொள்வது, சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை அண்ணலாருக்குச் சால அழகிதே?
முல்லை வெண் நகை மொய்குழலாய்! உனக்கு அல்லன் ஆவது அறிந்திலை, நீ; கனித் தொல்லை ஆர் பொழில்-தோணிபுரவர்க்கே நல்லை ஆயிடுகின்றனை-நங்கையே!
ஒன்றுதான் அறியார், உலகத்தவர்; நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர்; துன்று வார் பொழில்-தோணிபுரவர்தம் கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே.
உறவு பேய்க்கணம்; உண்பது வெண்தலை; உறைவது ஈமம்; உடலில் ஓர் பெண் கொடி; துறைகள் ஆர் கடல்-தோணிபுரத்து உறை இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே?
மாக யானை மருப்பு ஏர் முலையினர் போக, யானும் அவள் புக்கதே புக, தோகை சேர்தரு தோணிபுரவர்க்கே ஆக, யானும் அவர்க்கு-இனி ஆள் அதே.
இட்டம் ஆயின செய்வாள், என் பெண் கொடி- கட்டம் பேசிய கார் அரக்கன் தனைத் துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே.