பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருப்புள்ளிருக்குவேளூர்
வ.எண் பாடல்
1

வெள் எருக்கு அரவம் விரவும் சடைப்
புள்ளிருக்கு வேளூர் அரன் பொன்கழல்
உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர்,
நள் இருப்பர், நரகக்குழியிலே.

2

மாற்றம் ஒன்று அறியீர்; மனைவாழ்க்கை போய்க்
கூற்றம் வந்து உமைக் கொள்வதன் முன்னமே,
போற்ற வல்லிரேல், புள்ளிருக்குவேளூர்,
சீற்றம் ஆயின தேய்ந்து அறும்; காண்மினே!

3

அருமறையனை, ஆணொடு பெண்ணனை,
கருவிடம் மிக உண்ட எம் கண்டனை,
புரிவெண்நூலனை, புள்ளிருக்குவேளூர்,
உருகி நைபவர் உள்ளம் குளிருமே.

4

தன் உரு(வ்)வை ஒருவருக்கு அறிவு ஒணா
மின் உரு(வ்)வனை, மேனி வெண் நீற்றனை,
பொன் உரு(வ்)வனை, புள்ளிருக்குவேளூர்,
என்ன வல்லவர்க்கு இல்லை, இடர்களே.

5

செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா
அங்கியின்(ன்) உரு ஆகி, அழல்வது ஓர்
பொங்கு அர(வ்)வனை, புள்ளிருக்கு வேளூர்
மங்கைபாகனை, வாழ்த்த, வரும், இன்பே.

6

குற்றம் இ(ல்)லியை, கோலச் சிலையினால்
செற்றவர் புரம் செந்தழல் ஆக்கியை,
புற்று அர(வ்)வனை, புள்ளிருக்குவேளூர்,
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.

7

கையினோடு கால் கட்டி, உமர் எலாம்,
ஐயன் வீடினன் என்பதன் முன்னம், நீர்,
பொய் இலா அரன், புள்ளிருக்குவேளூர்,
மை உலாவிய கண்டனை, வாழ்த்துமே!

8

உள்ளம் உள்கி உகந்து, சிவன் என்று,
மெள்ள உள்க வினை கெடும்; மெய்ம்மையே;
புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே!

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

அரக்கனார் தலைபத்தும் அழிதர
நெருக்கி, மா மலர்ப்பாதம் நிறுவிய
பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர்
விருப்பினால்-தொழுவார் வினை வீடுமே.