பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஆறாம் தந்திரம் / அருள் உடைமையின் ஞானம் வருதல்
வ.எண் பாடல்
1

பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் செல்வம்
பிரான் அருள் உண்டு எனில் உண்டு நல் ஞானம்
பிரான் அருளில் பெரும் தன்மையும் உண்டு
பிரான் அருளில் பெரும் தெய்வமும் ஆமே.

2

தமிழ் மண்டலம் ஐந்தும் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகம் திரிவார்
அவிழும் மனமும் எம் ஆதி அறிவும்
தமிழ் மண்டலம் ஐந்தும் தத்துவம் ஆமே.

3

புண்ணியம் பாவம் இரண்டு உள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர் அறுத்துப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே.

4

முன் நின்று அருளும் முடிகின்ற காலத்து
நல் நின்று உலகில் நடு உயிராய் நிற்கும்
பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும்
முன் நின்று எனக்கு ஒரு முத்தி தந்தானே.

5

சிவன் அருளால் சிலர் தேவரும் ஆவர்
சிவன் அருளால் சிலர் தெய்வத்தோடு ஒப்பர்
சிவன் அருளால் வினை சேர கிலாமை
சிவன் அருள் கூடின் அச் சிவலோகம் ஆமே.

6

புண்ணியன் எந்தை புனிதன் இணை அடி
நண்ணி விளக்கு என ஞானம் விளைந்தது
மண்ணவர் ஆவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள் பெற்ற போதே.

7

காயத் தேர் ஏறி மனப் பாகன் கை கூட்ட
மாயத் தேர் ஏறி மங்கும் அவை உணர்
நேயத் தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால்
ஆயத் தேர் ஏறி அவன் இவன் ஆமே.

8

கதிர் கண்ட காந்தம் கனலின் வடிவு ஆம்
மதி கண்ட காந்தம் மணி நீர் வடிவு ஆம்
சதி கொண்ட சாக்கி எரியின் வடிவு ஆம்
எரி கொண்ட ஈசன் எழில் வடிவு ஆமே.

9

நாடும் உறவும் கலந்து எங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவ பெருமான் என்று
கூடுவன் கூடிக் குறை கழற்கே செல்ல
வீடும் அளவும் விடுகின்றிலேனே.