பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / முப்பரம்
வ.எண் பாடல்
1

தோன்றி என் உள்ளே சுழன்று எழுகின்றது ஓர்
மூன்று படி மண்டலத்து முதல்வனை
ஏன்று எய்தி இன்புற்று இருந்தே இளம் கொடி
நான்று நலம் செய் நலம் தரும் ஆறே.

2

மன்று நிறைந்தது மா பரம் ஆயது
நின்று நிறைந்தது நேர் தரு நந்தியும்
கன்று நினைந்து எழு தாய் என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே.

3

ஆறாறு தத்துவத்து அப்புறத்து அப் பரம்
கூறா உபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறு ஆக ஆனந்தம் பேணும் பெருகவே.

4

பற்று அறப் பற்றில் பரம் பதி ஆவது
பற்று அறப் பற்றில் பரன் அறிவே பரம்
பற்று அறப் பற்றினில் பற்ற வல்லார்க்கே
பற்று அறப் பற்றில் பரம் பரம் ஆமே.

5

பரம் பரம் ஆன பதி பாசம் பற்றாப்
பரம் பரம் ஆகும் பரம் சிவம் மேவப்
பரம் பரம் ஆன பர சிவானந்தம்
பரம் பரம் ஆகப் படைப்பது அறிவே.

6

நனவில் கலாதியா நால் ஒன்று அகன்று
தனி உற்ற கேவலம் தன்னில் தான் ஆகி
நினைவுற்று அகன்ற அதீதத்து உள் நேயம்
தனை உற்றிடத் தானே தற்பரம் ஆமே.

7

தன் கண்ட தூயமும் தன்னில் விலாசமும்
பின் காணும் தூடணம் தானும் பிறழ்வுற்றுத்
தற் பரன் கால பரமும் கலந்து அற்ற
நற் பரா தீதமும் நாட அகராதியே.