பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

பாயிரம் / வேதச் சிறப்பு
வ.எண் பாடல்
1

வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளம் உற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.

2

வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதன் உரைத்தானும் மெய்ப் பொருள் காட்டவே.

3

இருக்கு உருவாம் எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர் வாய் உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்
கருக்கு உருவாய் நின்ற கண்ணனும் ஆமே.

4

இருக்கில் இருக்கும் எண் இலி கோடி
அருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆர் அழல் வீச
உருக்கிய ரோமம் ஒளிவிடும் தானே.

5

திரு நெறி ஆவது சித்த சித்து அன்றிப்
பெரு நெறி ஆய பிரானை நினைந்து
குரு நெறி ஆம் சிவமா நெறி கூடும்
ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே.

6

ஆறு அங்கமாய் வரு மாமறை ஓதியைக்
கூறு அங்கம் ஆகக் குணம் பயில்வார் இல்லை
வேறு அங்கம் ஆக விளைவு செய்து அப்புறம்
பேறு அங்கம் ஆகப் பெருக்கு கின்றாரே.

7

பாட்டும் ஒலியும் பரக்கும் கணிகையர்
ஆட்டும் அறாத அவனியின் மாட்டாதார்
வேட்டு விருப்பார் விரதம் இல்லாதவர்
ஈட்டும் இடம் சென்று இகலல் உற்றாரே.