பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / பெரியாரைத் துணைக்கோடல்
வ.எண் பாடல்
1

ஓடவல்லார் தமரோடு நடா வுவன்
பாடவல்லார் ஒளி பார்மிசை வாழ்குவன்
தேட வல்லார்க்கு அருள் தேவர் பிரான் ஒடும்
கூட வல்லார் அடி கூடுவன் யானே.

2

தாம் இடர்ப் பட்டுத் தளிர் போல் தயங்கினும்
மா மனத்து அங்கு அன்பு வைத்த நிலையாகும்
நீ இடர்ப் பட்டு இருந்து என் செய்வாய் நெஞ்சமே
போம் இடத்து என்னொடும் போது கண்டாயே.

3

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிலர் தத்துவத்தை
நெறிதான் மிக மிக நின்று அருள் செய்யும்
பெரியாருடன் கூடல் பேர் இன்பம் ஆமே.

4

தார் சடையான் தன் தமராய் உலகினில்
போர் புகழான் எந்தை பொன்னடி சேருவார்
வாய் அடையா உள்ளம் தேவர்க்கு அருள் செய்யும்
கோ அடைந்து அந்நெறி கூடலும் ஆமே.

5

உடையான் அடியார் அடியாருடன் போய்
படையார் அழல் மேனிப் பதி சென்று புக்கேன்
கடையார் நின்றவர் கண்டு அறிவிப்ப
உடையான் வருக என ஓலம் என்றாரே.

6

அருமை வல்லான் கலை ஞானத்துள் தோன்றும்
பெருமை வல்லோன் பிறவிச் சுழி நீந்தும்
உரிமை வல்லோன் உணர்ந்து ஊழி இருக்கும்
இருமை வல்லாரோடு சேர்ந்தனன் யானே.