பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

மூன்றாம் தந்திரம் / கலைநிலை
வ.எண் பாடல்
1

காதல் வழி செய்த கண் நுதல் அண்ணலைக்
காதல் வழி செய்து கண் உற நோக்கிடில்
காதல் வழி செய்து கங்கை வழிதரும்
காதல் வழி செய்து காக்கலும் ஆமே.

2

காக்கலும் ஆகும் கரணங்கள் நான்கையும்
காக்கலும் ஆகும் கலை பதினாரையும்
காக்கலும் ஆகும் கலந்த நல் வாயுவும்
காக்கலும் ஆகும் கருத்து உற நில்லே.

3

நிலை பெற நின்றது நேர்தரு வாயு
சிலை பெற நின்றது தீபமும் ஒத்து
கலை வழி நின்ற கலப்பை அறியில்
மலைவற ஆகும் வழி இது ஆமே.

4

புடை ஒன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடை ஒன்றி நின்றிட வாய்த்த வழியும்
சடை ஒன்றி நின்ற அச் சங்கர நாதன்
விடை ஒன்றில் ஏறியே வீற்று இருந்தானே.

5

இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு ஒளி பெற நிற்கத்
தருக்கு ஒன்றி நின்றிடும் சாதகன் ஆமே.

6

சாதகம் ஆன அத்தன்மையை நோக்கியே
மாதவம் ஆன வழிபாடு செய்திடும்
போதகம் ஆகப் புகல் உறப் பாய்ச்சினால்
வேதகம் ஆக விளைந்தது கிடக்குமே.

7

கிடந்தது தானே கிளர் பயன் மூன்று
நடந்தது தானே உள் நாடியுள் நோக்கிப்
படர்ந்தது தானே பங்கயம் ஆகத்
தொடர்ந்தது தானே அச் சேதியுள் நின்றே.

8

தானே எழுந்த அத் தத்துவ நாயகி
ஊனே வழி செய்து எம் உள்ளே இருந்திடும்
வானோர் உலகு ஈன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவ ஆலயம் ஆகுமே.

9

திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகிலர் ஆரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலும் ஆமே.

10

சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னில் பிரியும் நாள்
சாதனம் ஆகும் குருவை வழிபட்டு
மாதனம் ஆக மதித்துக் கொள்ளீரே.

11

ஈர் ஆறு கால் கொண்டு எழுந்த புரவியைப்
பேராமல் கட்டிப் பெரிது உண்ண வல்லீரேல்
நீர் ஆயிரமும் நிலம் ஆயிரத்து ஆண்டும்
பேராது காயம் பிரான் நந்தி ஆணையே.

12

ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசியின் மூன்றும் நாவில் இரண்டும்
தேசியும் தேசனும் தன்னில் பிரியும் நாள்
மாசு அறு சோதி வகுத்து வைத்தானே.