பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஐந்தாம் தந்திரம் / கடும் சுத்த சைவம்
வ.எண் பாடல்
1

வேடம் கடந்து விகிர்தன் தன் பால் மேவி
ஆடம்பரம் இன்றி ஆசாபாசம் செற்றுப்
பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவ போதகர் சுத்த சைவரே.

2

உடல் ஆன ஐந்தையும் ஓர் ஆறும் ஐந்தும்
மடல் ஆன மா மாயை மற்று உள்ள நீவப்
படல் ஆன கேவல பாசம் துடைத்துத்
திடம் ஆய்த் தனை உறல் சித்தாந்த மார்க்கமே.

3

சுத்தச் சிவன் உரை தான் அதில் தோயாமல்
முத்தர் பதப் பொருள் முத்தி வித்து ஆம் மூலம்
அத் தகையான் மா அரனை அடைந்தற்றால்
சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே.

4

நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டு இலாத் தற்பதம்
தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால்
தான் என்று நான் என்றும் சாற்ற கில்லேனே.

5

சாற்ற அரிது ஆகிய தத்துவம் சிந்தித்தால்
ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும்
மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளியாய் நிற்கும்
பாற்பர சாயுச்சியம் ஆகும் பதியே.