பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஐந்தாம் தந்திரம் / சகமார்க்கம்
வ.எண் பாடல்
1

சன் மார்க்கம் தானே சக மார்க்கம் ஆனது
மன் மார்க்கம் ஆம் முத்தி சித்திக்குள் வைப்பது ஆம்
பின் மார்க்கம் ஆனது பேராப் பிறந்து இறந்து
உன் மார்க்க ஞானத்து உறுதியும் ஆமே

2

மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீட்டு இல்லை ஆகும்
உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே.

3

யோகச் சமாதியின் உள்ளே அகல் இடம்
யோகச் சமாதியின் உள்ளே உளர் ஒளி
யோகச் சமாதியின் உள்ளே உள சத்தி
யோகச் சமாதி உகந்தவர் சித்தரே.

4

யோகமும் போகமும் யோகியர்க்கு ஆகும் ஆல்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளத்து ஓர்
போகம் புவியில் புருடார்த்த சித்தியது
ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே.

5

ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈர் எண் கலாந்தது விண் ஒளி
போதஆலயத்துப் புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடல் ஆம் சக மார்க்கமே.

6

பிணங்கி நிற்கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயிர் மன வாளால்
கணம் பதினெட்டும் கருதும் ஒருவன்
வணங்க வல்லான் சிந்தை வந்து நின்றானே.

7

வளம் கனி ஒக்கும் வள நிறத் தார்க்கும்
வளம் கனி ஒப்பது ஓர் வாய்மையன் ஆகும்
உளம் கனிந்து உள்ளம் உகந்து இருப்பார்க்குப்
பழம் கனிந்து உள்ளே பகுந்து நின்றானே.