பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மேவிய சற்புத்திர மார்க்கம் மெய்த் தொழில் தாவிப் பதாஞ்சக மார்க்கம் சகத் தொழில் ஆவது இரண்டும் அகன்று சக மார்க்கத் தேவி யோடு ஒன்றல் சன்மார்க்கத் தெளிவு அதே.
பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசு அற்ற நல் தவம் வாய்மை அழுக்கு இன்மை நேசித்திட்டு அன்னமும் நீ சுத்தி செய்தல் மற்று ஆசு அற்ற சற்புத்திர மார்க்கம் ஆகுமே.
அறு கால் பறவை அலர் தேர்ந்து உழலும் மறுகா நரை அன்னம் தாமரை நீலம் குறுகா நறுமலர் கொய்வன கண்டும் சிறுகால் அற நெறி சேர கிலாரே.
அரும் கரை ஆவது அவ் அடி நீழல் பெரும் கரை ஆவது பிஞ்ஞகன் ஆணை வரும் கரை ஏகின்ற மன் உயிர்க்கு எல்லாம் ஒரும் கரையாய் உலகு ஏழின் ஒத்தானே.
உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி வியந்தும் அரன் அடிக்கே முறை செய்மின் பயந்தும் பிறவிப் பயன் அது ஆகும் பயந்து பரிக்கில் அப் பான்மையன் ஆமே.
நின்று தொழுவன் கிடந்து எம்பிரான் தன்னை என்றும் தொழுவன் எழில் பரஞ் சோதியைத் துன்று மலர் தூவித் தொழுமின் தொழும் தோறும் சென்று வெளிப்படும் தேவர் பிரானே.
திரு மன்னும் சற்புத்திர மார்க்கச் சரியை உரு மன்னி வாழும் உலகத்தீர் கேண் மின் கரு மன்னும் பாசம் கை கூம்பத் தொழுது இரு மன்னும் நாள் தோறும் இன்பு உற்று இருந்தே.