பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

காரிநாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து, வண் தமிழின்
துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக்
குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகை
முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர் பால் பயில்வார்.

2

அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்தவுரை நயம் ஆக்கி,
கொங்கு அலர்தார் மன்னவன் பால் பெற்ற நிதிக் குவை கொண்டு
வெங் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறைச் சென்னிச்
சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார்.

3

யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழிப் பயன் இயம்பித்
தேவர்க்கு முதல்தேவர் சீர் அடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்தம்
கா உற்ற திருக்கயிலை மறவாத கருத்தினர் ஆய்.

4

ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி,
ஆய்ந்த உணர்வு இடை அறா அன்பினர் ஆய், அணி கங்கை
தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால்
வாய்ந்த மனம் போல் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்.

5

வேரியார் மலர்க் கொன்றை வேணியார் அடிபேணும்
காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால்
வாரியார் மதயானை வழுதியர் தம் மதி மரபில்
சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்.