பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மறையாளர் திருக்கடவூர் வந்து உதித்து, வண் தமிழின் துறை ஆன பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக் குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகை முறையாலே தொகுத்து அமைத்து மூவேந்தர் பால் பயில்வார்.
அங்கு அவர் தாம் மகிழும் வகை அடுத்தவுரை நயம் ஆக்கி, கொங்கு அலர்தார் மன்னவன் பால் பெற்ற நிதிக் குவை கொண்டு வெங் கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறைச் சென்னிச் சங்கரனார் இனிது அமரும் தானங்கள் பல சமைத்தார்.
யாவர்க்கும் மனம் உவக்கும் இன்ப மொழிப் பயன் இயம்பித் தேவர்க்கு முதல்தேவர் சீர் அடியார் எல்லார்க்கும் மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்தம் கா உற்ற திருக்கயிலை மறவாத கருத்தினர் ஆய்.
ஏய்ந்த கடல் சூழ் உலகில் எங்கும் தம் இசை நிறுத்தி, ஆய்ந்த உணர்வு இடை அறா அன்பினர் ஆய், அணி கங்கை தோய்ந்த நெடும் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால் வாய்ந்த மனம் போல் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்.
வேரியார் மலர்க் கொன்றை வேணியார் அடிபேணும் காரியார் கழல் வணங்கி அவர் அளித்த கருணையினால் வாரியார் மதயானை வழுதியர் தம் மதி மரபில் சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம்.