அருள்பழுத் தளிந்த கருணை வான்கனி!
ஆரா இன்பத் தீராக் காதல்!
அடியவர்க் கமிர்த வாரி நெடுநிலை
மாடக் கோபுரத்(து) ஆடகக் குடுமி
5 மழைவயிறு கிழிக்கும் கழுமல வாணநின்
வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி
யானொன் றுணர்த்துவன் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
10
நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி
எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்(து)
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியுந் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை; யான்அவர்
15
தந்தைய ராகியுந் தாய ராகியும்
வந்தி ராததும் இல்லை, முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை
20
யான்அவை
தம்மைத் தின்னா தொழிந்ததும் இல்லை
அனைத்தே காலமும் சென்றது; யான்இதன்
மேல்இனி
இளைக்குமா றிலனே நாயேன்?
25
நந்தாச் சோதிநின் அஞ்செழுத்து நவிலுந்
தந்திரம் பயின்றதும் இலனே தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலராச்
சொன்னது மந்திர மாக என்னையும்
30
இடர்ப்பிறப் பிறப்பெனும் இரண்டின்
கடற்ப டாவகை காத்தல்நின் கடனே.