இலை ஆரும் சூலத்தாய்! எண் தோளானே! “எவ்
இடத்தும் நீ அலாது இல்லை” என்று
தலை ஆரக் கும்பிடுவார் தன்மையானே! தழல்
மடுத்த மா மேரு, கையில் வைத்த,
சிலையானே! திரு ஆனைக்காவுள் மேய தீஆடீ!
சிறு நோயால் நலிவுண்டு உள்ளம்
அலையாதே, நின் அடியே அடையப்பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.