பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆனைக்கா
வ.எண் பாடல்
1

எத் தாயர், எத் தந்தை, எச் சுற்றத்தார், எம் மாடு
சும்மாடு? ஏவர் நல்லார்?
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை; சிறு
விறகால்-தீ மூட்டிச் செல்லா நிற்பர்;
சித்து ஆய வேடத்தாய்! நீடு பொன்னித் திரு
ஆனைக்கா உடைய செல்வா! என்தன்
அத்தா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

2

ஊன் ஆகி, உயிர் ஆகி, அதனுள் நின்ற உணர்வு
ஆகி, பிற அனைத்தும் நீயாய், நின்றாய்;
நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து, நல்லனவும்
தீயனவும் காட்டா நின்றாய்;
தேன் ஆரும் கொன்றையனே! நின்றியூராய்! திரு
ஆனைக்காவில் உறை சிவனே! ஞானம்-
ஆனாய்! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

3

ஒப்பு ஆய், இவ் உலகத்தோடு ஒட்டி வாழ்வான்,
ஒன்று அலாத் தவத்தாரோடு உடனே நின்று,
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி, நற்று உன்
திறம் மறந்து திரிவேனை, காத்து, நீ வந்து
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி, என்னை
ஆண்டவனே! எழில் ஆனைக்காவா! வானோர்
அப்பா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

4

நினைத்தவர்கள் நெஞ்சுளாய்! வஞ்சக் கள்வா! நிறை
மதியம் சடை வைத்தாய்! அடையாது உன்பால்
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரியச் செற்றாய்! முன்
ஆனைத் தோல் போர்த்த முதல்வா! என்றும்
கனைத்து வரும் எருது ஏறும் காளகண்டா!
கயிலாயமலையா! நின் கழலே சேர்ந்தேன்;
அனைத்து உலகும் ஆள்வானே! ஆனைக்காவா!
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

5

இம் மாயப் பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து-
இடைச் சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம்,
கைம் மான, மனத்து உதவி, கருணை செய்து, காதல்
அருள் அவை வைத்தாய்! காண நில்லாய்!
வெம் மான மதகரியின் உரிவை போர்த்த
வேதியனே! தென் ஆனைக்காவுள் மேய
அம்மான்! நின் பொன் பாதம் அடையப்பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

6

உரை ஆரும் புகழானே! ஒற்றியூராய்! கச்சி
ஏகம்பனே! காரோணத்தாய்!
விரை ஆரும் மலர் தூவி வணங்குவார் பால்
மிக்கானே! அக்கு, அரவம், ஆரம், பூண்டாய்!
திரை ஆரும் புனல் பொன்னித் தீர்த்தம் மல்கு
திரு ஆனைக்காவில் உறை தேனே! வானோர்-
அரையா! உன் பொன்பாதம் அடையப் பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

7

மை ஆரும் மணிமிடற்றாய்! மாது ஓர் கூறாய்!
மான்மறியும், மா மழுவும், அனலும், ஏந்தும்
கையானே! காலன் உடல் மாளச் செற்ற கங்காளா!
முன் கோளும் விளைவும் ஆனாய்!
செய்யானே, திருமேனி! அரியாய்! தேவர்-குலக்
கொழுந்தே! தென் ஆனைக்காவுள் மேய
ஐயா! உன் பொன்பாதம் அடையப்பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

8

இலை ஆரும் சூலத்தாய்! எண் தோளானே! “எவ்
இடத்தும் நீ அலாது இல்லை” என்று
தலை ஆரக் கும்பிடுவார் தன்மையானே! தழல்
மடுத்த மா மேரு, கையில் வைத்த,
சிலையானே! திரு ஆனைக்காவுள் மேய தீஆடீ!
சிறு நோயால் நலிவுண்டு உள்ளம்
அலையாதே, நின் அடியே அடையப்பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

9

விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய்! வேத-
நெறியானே! எறிகடலின் நஞ்சம் உண்டாய்!
எண் ஆரும் புகழானே! உன்னை, “எம்மான்!” என்று
என்றே நாவினில் எப்பொழுதும் உன்னி,
கண் ஆரக் கண்டிருக்கக் களித்து, எப்போதும்,
கடிபொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய
அண்ணா! நின் பொன்பாதம் அடையப் பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

10

கொடி ஏயும் வெள் ஏற்றாய்! கூளி பாட, குறள் பூதம்
கூத்து ஆட, நீயும் ஆடி,
வடிவு ஏயும் மங்கை தனை வைத்த மைந்தா! மதில்
ஆனைக்கா உளாய்! மாகாளத்தாய்!
படி ஏயும் கடல் இலங்கைக் கோமான் தன்னைப்
பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த
அடியே வந்து, அடைந்து, அடிமை ஆகப் பெற்றால்,
அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆனைக்கா
வ.எண் பாடல்
1

முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்தி தன்னை;
மூவாத சிந்தையே, மனமே, வாக்கே,
தன் ஆனையாய் பண்ணி ஏறினானை; சார்தற்கு
அரியானை; தாதை தன்னை;
என் ஆனைக்கன்றினை; என் ஈசன் தன்னை;
எறி நீர்த் திரை உகளும் காவிரீ சூழ்
தென் ஆனைக்காவானை; தேனை; பாலை;
செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.

2

மருந்தானை, மந்திரிப்பார் மனத்து உளானை, வளர்
மதி அம் சடையானை, மகிழ்ந்து என் உள்ளத்து
இருந்தானை, இறப்பு இலியை, பிறப்பு இலானை,
இமையவர் தம் பெருமானை, உமையாள் அஞ்சக்
கருந் தான-மதகளிற்றின் உரி போர்த்தானை, கன
மழுவாள் படையானை, பலி கொண்டு ஊர் ஊர்
திரிந்தானை, திரு ஆனைக்கா உளானை,
செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

3

முற்றாத வெண்திங்கள் கண்ணியானை, முந்நீர் நஞ்சு
உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும்
உற்றானை, பல் உயிர்க்கும் துணை ஆனானை,
ஓங்காரத்து உள்பொருளை, உலகம் எல்லாம்
பெற்றானை, பின் இறக்கம் செய்வான் தன்னை,
“பிரான்” என்று போற்றாதார் புரங்கள் மூன்றும்
செற்றானை, திரு ஆனைக்கா உளானை,
செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

4

கார் ஆரும் கறை மிடற்று எம் பெருமான் தன்னை,
காதில் வெண் குழையானை, கமழ் பூங்கொன்றைத்-
தாரானை, புலி அதளின் ஆடையானை, தான் அன்றி
வேறு ஒன்றும் இல்லா ஞானப்
பேரானை, மணி ஆரம் மார்பினானை, பிஞ்ஞகனை,
தெய்வ நால்மறைகள் பூண்ட
தேரானை, திரு ஆனைக்கா உளானை,
செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

5

பொய் ஏதும் இல்லாத மெய்யன் தன்னை,
புண்ணியனை, நண்ணாதார் புரம் நீறு ஆக
எய்தானை, செய் தவத்தின் மிக்கான் தன்னை, ஏறு
அமரும் பெருமானை, இடம் மான் ஏந்து
கையானை, கங்காள வேடத்தானை, கட்டங்கக்
கொடியானை, கனல் போல் மேனிச்
செய்யானை, திரு ஆனைக்கா உளானை,
செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

6

கலையானை, பரசு தர பாணியானை, கன
வயிரத்திரளானை, மணி மாணிக்க-
மலையானை, என் தலையின் உச்சியானை, வார்தரு
புன்சடையானை, மயானம் மன்னும்
நிலையானை, வரி அரவு நாணாக் கோத்து
நினையாதார் புரம் எரிய வளைத்த மேருச்-
சிலையானை, திரு ஆனைக்கா உளானை,
செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

7

ஆதியனை, எறி மணியின் ஓசையானை,
அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க
சோதியனை, தூ மறையின் பொருளான் தன்னை,
சுரும்பு அமரும் மலர்க்கொன்றை தொல்-நூல் பூண்ட
வேதியனை, அறம் உரைத்த பட்டன் தன்னை,
விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றைச்
சேதியனை, திரு ஆனைக்கா உளானை,
செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

8

மகிழ்ந்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, மறவாது
கழல் நினைந்து வாழ்த்தி ஏத்திப்
புகழ்ந்தாரைப் பொன்னுலகம் ஆள்விப்பானை, பூத
கணப்படையானை, புறங்காட்டு ஆடல்
உகந்தானை, பிச்சையே இச்சிப்பானை, ஒண்
பவளத்திரளை, என் உள்ளத்துள்ளே
திகழ்ந்தானை, திரு ஆனைக்கா உளானை,
செழுநீர்த்திரளை, சென்று ஆடினேனே.

9

நசையானை; நால்வேதத்து அப்பாலானை; நல்குரவும்,
தீப்பிணி நோய், காப்பான் தன்னை;
இசையானை; எண் இறந்த குணத்தான் தன்னை;
இடை மருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின்
மிசையானை; விரிகடலும், மண்ணும், விண்ணும், மிகு
தீயும், புனல், எறி காற்று, ஆகி எட்டுத்-
திசையானை; திரு ஆனைக்கா உளானை;
செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.

10

பார்த்தானை, காமன் உடல் பொடிஆய் வீழ; பண்டு
அயன், மால், இருவர்க்கும் அறியா வண்ணம்
சீர்த்தானை; செந்தழல் போல் உருவினானை; தேவர்கள்
தம் பெருமானை; திறம் உன்னாதே
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை
எலாம் கெடுத்து, அவன் தன் இடர் அப்போதே
தீர்த்தானை; திரு ஆனைக்கா உளானை;
செழுநீர்த்திரளை; சென்று ஆடினேனே.