பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பாற்றுறை
வ.எண் பாடல்
1

கார் ஆர் கொன்றை கலந்த முடியினர்,
சீர் ஆர் சிந்தை செலச் செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
யார், ஆர் ஆதி முதல்வரே.

2

நல்லாரும் அவர்; தீயர் எனப்படும்
சொல்லார்; நல்மலர் சூடினார்;
பல் ஆர் வெண் தலைச் செல்வர் எம் பாற்றுறை
எல்லாரும் தொழும் ஈசரே.

3

விண் ஆர் திங்கள் விளங்கும் நுதலினர்,
எண்ணார் வந்து, என் எழில் கொண்டார்
பண் ஆர் வண்டு இனம் பாடல் செய் பாற்றுறை
யுள் நாள்நாளும் உறைவரே.

4

பூவும் திங்கள் புனைந்த முடியினர்,
ஏவின் அல்லார் எயில் எய்தார்
பாவம் தீர் புனல் மல்கிய பாற்றுறை,
ஓ! என் சிந்தை ஒருவரே

5

மாகம் தோய் மதி சூடி, மகிழ்ந்து, எனது
ஆகம் பொன்நிறம் ஆக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர், பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே.

6

போது பொன் திகழ் கொன்றை புனை முடி
நாதர் வந்து, என் நலம் கொண்டார்
பாதம் தொண்டர் பரவிய பாற்றுறை
வேதம் ஓதும் விகிர்தரே.

7

வாடல் வெண்தலை சூடினர், மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டு இனம் பண் செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே.

8

வெவ்வ மேனியராய், வெள்ளை நீற்றினர்;
எவ்வம் செய்து, என் எழில் கொண்டார்;
பவ்வநஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே.

9

ஏனம் அன்னமும் ஆனவருக்கு எரி
ஆன வண்ணத்து எம் அண்ணலார்
பானல் அம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே.

10

வெந்த நீற்றினர், வேலினர், நூலினர்,
வந்து என் நன் நலம் வௌவினார்
பைந் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர்தாம் ஓர் மணாளரே.

11

பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து-நூறு பெயரனை,
பத்தன் ஞானசம்பந்தனது இன் தமிழ்
பத்தும் பாடிப் பரவுமே!