பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
“பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரைக் கங்கை வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன், விடை ஏறும் வள்ளல் வலஞ்சுழிவாணன்” என்று மருவி நினைந்து ஏத்தி, உள்ளம் உருக, உணருமின்கள்! உறு நோய் அடையாவே.
கார் அணி வெள்ளை மதியம் சூடி, கமழ் புன்சடை தன்மேல் தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து, வார் அணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி மேவியவர் ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே!
பொன் இயலும் திருமேனி தன்மேல் புரிநூல் பொலிவித்து மின் இயலும் சடை தாழ, வேழ உரி போர்த்து, அரவு ஆட, மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழி வாணர் தம்மேல் உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம்; பிணி போமே.
விடை, ஒரு பால்; ஒரு பால் விரும்பு மெல்லியல்; புல்கியது ஓர் சடை, ஒரு பால்; ஒருபால் இடம் கொள் தாழ்குழல் போற்று இசைப்ப, நடை, ஒரு பால்; ஒருபால் சிலம்பு; நாளும் வலஞ்சுழி சேர் அடை, ஒரு பால்; அடையாத செய்யும் செய்கை அறியோமே!
கை அமரும் மழு, நாகம், வீணை, கலைமான் மறி, ஏந்தி; மெய் அமரும் பொடிப் பூசி; வீசும் குழை ஆர்தரு தோடும் பை அமரும்(ம்) அரவு ஆட, ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம் மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே.
தண்டொடு சூலம் தழைய ஏந்தி, தையல் ஒருபாகம் கண்டு, இடு பெய் பலி பேணி நாணார், கரியின் உரி-தோலர், வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர் தொண்டொடு கூடித் துதைந்து நின்ற தொடர்பைத் தொடர்வோமே.
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து, வளையாதார் சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான், இடர் நீங்க மல் இயலும் திரள்தோள் எம் ஆதி, வலஞ்சுழி மா நகரே புல்கிய வேந்தனைப் புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே.
வெஞ்சின வாள் அரக்கன், வரையை விறலால் எடுத்தான், தோள அஞ்சும் ஒரு ஆறு இரு நான்கும் ஒன்றும் அடர்த்தார்; அழகு ஆய நஞ்சு இருள் கண்டத்து நாதர்; என்றும் நணுகும் இடம்போலும் மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே.
ஏடு இயல் நான்முகன், சீர் நெடுமால், என நின்றவர் காணாா கூடிய கூர் எரி ஆய் நிமிர்ந்த குழகர்; உலகு ஏத்த வாடிய வெண்தலை கையில் ஏந்தி; வலஞ்சுழி மேய எம்மான்- பாடிய நால்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே!
குண்டரும் புத்தரும், கூறை இன்றிக் குழுவார், உரை நீத்து தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான்; அழல் ஆடி வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன்; எம்மான் பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே.
வாழி எம்மான், எனக்கு எந்தை, மேய வலஞ்சுழி மா நகர்மேல், காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ்மாலை, ஆழி இவ் வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும் ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும்; உருவும் உயர்வு ஆமே.