பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஇன்னம்பர்
வ.எண் பாடல்
1

விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்;
பெண் ஒருபாகர் போலும்; பேடு அலி ஆணர் போலும்;
வண்ண மால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்;
எண் உரு அநேகர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

2

பன்னிய மறையர் போலும்; பாம்பு அரை உடையர் போலும்;
துன்னிய சடையர் போலும்; தூ மதி மத்தர் போலும்;
மன்னிய மழுவர் போலும்; மாது இடம் மகிழ்வர் போலும்;
என்னையும் உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

3

மறி ஒரு கையர் போலும்; மாது உமை உடையர் போலும்;
பறி தலைப் பிறவி நீக்கிப் பணி கொள வல்லர் போலும்;
செறிவு உடை அங்கமாலை சேர் திரு உருவர் போலும்;
எறிபுனல் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

4

விடம் மலி கண்டர் போலும்; வேள்வியை அழிப்பர் போலும்;
கடவு நல் விடையர் போலும்; காலனைக் காய்வர் போலும்;
படம் மலி அரவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்;
இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே.

5

அளி மலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை உடையர் போலும்;
களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்;
வெளி வளர் உருவர் போலும்; வெண் பொடி அணிவர் போலும்;
எளியவர், அடியர்க்கு என்றும்;-இன்னம்பர் ஈசனாரே.

6

கணை அமர் சிலையர் போலும்; கரி உரி உடையர் போலும்;
துணை அமர் பெண்ணர் போலும்; தூ மணிக் குன்றர் போலும்;
அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும்
இணை அடி உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

7

பொருப்பு அமர் புயத்தர் போலும்; புனல் அணி சடையர் போலும்;
மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும்;
உருத்திரமூர்த்தி போலும்; உணர்வு இலார் புரங்கள் மூன்றும்
எரித்திடு சிலையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

8

காடு இடம் உடையர் போலும்; கடிகுரல் விளியர் போலும்;
வேடு உரு உடையர் போலும்; வெண்மதிக் கொழுந்தர் போலும்;
கோடு அலர் வன்னி, தும்பை, கொக்கு இறகு, அலர்ந்த கொன்றை
ஏடு, அமர் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

9

காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்;
நீறு உடை உருவர் போலும்; நினைப்பினை அரியர் போலும்;
பாறு உடைத் தலை கை ஏந்திப் பலி திரிந்து உண்பர் போலும்;
ஏறு உடைக் கொடியர் போலும்-இன்னம்பர் ஈசனாரே.

10

ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்;
பார்த்தனோடு அமர் பொரூது படை கொடுத்து அருள்வர் போலும்;
தீர்த்தம் ஆம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்;
ஏத்த ஏழ் உலகும் வைத்தார்-இன்னம்பர் ஈசனாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஇன்னம்பர்
வ.எண் பாடல்
1

மன்னும் மலைமகள் கையால் வருடின; மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப் பொருள் ஆயின; தூக் கமலத்து
அன்ன வடிவின; அன்பு உடைத் தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன - இன்னம்பரான்தன் இணை அடியே.

2

பைதல்பிணக்குழைக் காளி வெங்கோபம் பங்கப்படுப்பான்
செய்தற்கு அரிய திருநடம் செய்தன; சீர் மறையோன்
உய்தல் பொருட்டு வெங் கூற்றை உதைத்தன; உம்பர்க்கு எல்லாம்
எய்தற்கு அரியன-இன்னம்பரான்தன் இணை அடியே.

3

சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின; தூ மலரால்
வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின; மன்னும் மறைகள் தம்மில்
பிணங்கி நின்று இன்ன(அ)அளவு என்று அறியாதன; பேய்க்கணத்தோடு
இணங்கி நின்று ஆடின-இன்னம்பரான்தன் இணை அடியே.

4

ஆறு ஒன்றிய சமயங்களின் அவ் அவர்க்கு அப் பொருள்கள்
வேறு ஒன்று இலாதன; விண்ணோர் மதிப்பன; மிக்கு உவமன்
மாறு ஒன்று இலாதன; மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும்
ஈறு ஒன்று இலாதன-இன்னம்பரான்தன் இணை அடியே.

5

அரக்கர் தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின் வாய்க்
கரக்க முன் வைதிகத் தேர்மிசை நின்றன; கட்டு உருவம்
பரக்க வெங்கான் இடை வேடு உரு ஆயின; பல்பதிதோறு
இரக்க நடந்தன-இன்னம்பரான்தன் இணை அடியே.

6

கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின; கேடு படா
ஆண்டும் பலபலஊழியும் ஆயின; ஆரணத்தின்
வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின; மேவு சிலம்பு
ஈண்டும் கழலின-இன்னம்பரான்தன் இணை அடியே.

7

போற்றும் தகையன; பொல்லா முயலகன் கோபப் புன்மை
ஆற்றும் தகையன; ஆறுசமயத்தவர் அவரைத்
தேற்றும் தகையன; தேறிய தொண்டரைச் செந்நெறிக்கே
ஏற்றும் தகையன-இன்னம்பரான்தன் இணை அடியே.

8

பயம், புன்மை, சேர்தரு பாவம், தவிர்ப்பன; பார்ப்பதிதன்
குயம் பொன்மை மா மலர் ஆகக் குலாவின; “கூட ஒண்ணாச்
சயம்பு” என்றே, “தகு தாணு” என்றே, சதுர்வேதங்கள் நின்று
இயம்பும் கழலின-இன்னம்பரான்தன் இணைஅடியே.

9

அயன், நெடுமால், இந்திரன், சந்திராதித்தர், அமரர் எல்லாம்
“சய சய” என்று முப்போதும் பணிவன; தண்கடல் சூழ்
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும்
இயபரம் ஆவன இன்னம்பரான்தன் இணைஅடியே.

10

தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன; தாமரைப்போது,
உருக்கிய செம்பொன், உவமன் இலாதன; ஒண் கயிலை
நெருக்கிய வாள் அரக்கன் தலைபத்தும் நெரித்து, அவன்தன்
இருக்கு இயல்பு ஆயின-இன்னம்பரான்தன் இணை அடியே.