பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவெண்ணியூர்
வ.எண் பாடல்
1

தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும்,
தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும்,
புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம்
பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும்,
வண்டு அமரும் மலர்க் கொன்றை மாலையாரும்,
வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும்,
விண்டவர் தம் புரம் மூன்றும் எரி செய்தாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

2

நெருப்பு அனைய மேனிமேல் வெண் நீற்றாரும்,
நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும்,
பொருப்பு அரையன் மடப்பாவை இடப்பாலரும்,
பூந்துருத்தி நகர் மேய புராணனாரும்,
மருப்பு அனைய வெண் மதியக் கண்ணியாரும்,
வளை குளமும் மறைக்காடும் மன்னினாரும்,
விருப்பு உடைய அடியவர் தம் உள்ளத்தாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

3

கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும், கரி
காட்டில் எரி ஆடும் கடவுளாரும்,
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும்,
பரவுவார் பாவங்கள் பாற்று வாரும்,
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த
திருப் புன்கூர் மேவிய செல்வனாரும்,
மெய் எலாம் வெண்நீறு சண்ணித்தாரும் வெண்ணி
அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

4

சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும், தக்கன்
தன் பெருவேள்வி தகர்த்திட்டாரும்,
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண்
பலிக்கு என்று ஊர் ஊரின் உழிதர்வாரும்,
மடை ஏறிக் கயல் பாய வயல்கள் சூழ்ந்த
மயிலாடுதுறை உறையும் மணாளனாரும்,
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

5

மண், இலங்கு நீர், அனல், கால், வானும், ஆகி மற்று
அவற்றின் குணம் எலாம் ஆய் நின்றாரும்;
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும்;
பருப்பதமும் பாசூரும் மன்னினாரும்;
கண் இலங்கு நுதலாரும்; கபாலம் ஏந்திக் கடை
தோறும் பலி கொள்ளும் காட்சியாரும்;
விண் இலங்கு வெண் மதியக் கண்ணியாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

6

வீடுதனை மெய் அடியார்க்கு அருள் செய்வாரும்,
வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும்,
கூடலர் தம் மூ எயிலும் எரிசெய்தாரும், குரை
கழலால் கூற்றுவனைக் குமை செய்தாரும்,
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும்,
ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும்,
வேடுவனாய் மேல் விசயற்கு அருள் செய்தாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

7

மட்டு இலங்கு கொன்றை அம்தார்-மாலை சூடி,
மடவாள் அவளோடு, மான் ஒன்று ஏந்தி,
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி, நாளும் சில்பலிக்கு
என்று ஊர் ஊரின் திரிதர்வாரும்;
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்
தன் காலம் அறுப்பார் தாமும்;
விட்டு இலங்கு வெண்குழை சேர் காதினாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

8

செஞ்சடைக்கு ஓர் வெண்திங்கள் சூடினாரும், திரு
ஆலவாய் உறையும் செல்வனாரும்,
அஞ்சனக் கண் அரிவை ஒருபாகத்தாரும், ஆறு
அங்கம் நால் வேதம் ஆய் நின்றாரும்,
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில்
ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும்,
வெஞ்சினத்த வேழம் அது உரி செய்தாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

9

வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும்,
வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும்,
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும்,
கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும்,
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும்,
உத்தமராய் எத்திசையும் மன்னினாரும்,
விளங்(கு)கிளரும் வெண்மழு ஒன்று ஏந்தினாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.

10

பொன் இலங்கு கொன்றை அம்தார்-மாலை சூடிப்
புகலூரும் பூவணமும் பொருந்தினாரும்,
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும்,
குளிர் ஆர்ந்த செஞ்சடை எம் குழகனாரும்,
தென் இலங்கை மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு
விரலால் அடர்த்து அவனுக்கு அருள் செய்தாரும்,
மின் இலங்கு நுண் இடையாள் பாகத்தாரும்
வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே.