பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவலஞ்சுழி
வ.எண் பாடல்
1

அலை ஆர் புனல் கங்கை நங்கை காண
அம்பலத்தில் அருநட்டம் ஆடி, வேடம்
தொலையாத வென்றியார், நின்றியூரும் நெடுங்களமும்
மேவி, விடையை மேற்கொண்டு,
இலை ஆர் படை கையில் ஏந்தி, எங்கும்
இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த,
மலை ஆர் திரள் அருவிப் பொன்னி சூழ்ந்த
வலஞ்சுழியே புக்கு, இடமா மன்னினாரே.

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவலஞ்சுழியும், திருக்கொட்டையூர்க் கோடீச்சுரமும்
வ.எண் பாடல்
1

கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்;
கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய்;
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய்;
பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்;
வரு மணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்;
மாதேவன் கண்டாய்; வரதன் கண்டாய்
குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

2

கலைக் கன்று தங்கு கரத்தான் கண்டாய்; கலை
பயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்;
அலைக் கங்கை செஞ்சடை மேல் ஏற்றான
கண்டாய்; அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய்;
மலைப் பண்டம் கொண்டு வரும் நீர்ப் பொன்னி
வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
குலைத் தெங்கு அம்சோலை சூழ் கொட்டையூரில்
கோடிச்சுரத்து உறையும் கோமான் தானே.

3

செந்தாமரைப் போது அணிந்தான் கண்டாய்; சிவன்
கண்டாய்; தேவர் பெருமான் கண்டாய்;
பந்து ஆடு மெல் விரலாள் பாகன் கண்டாய்;
பாலோடு, நெய், தயிர், தேன், ஆடி கண்டாய்;
மந்தாரம் உந்தி வரும் நீர்ப்பொன்னி
வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய்
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

4

பொடி ஆடும் மேனிப் புனிதன் கண்டாய்; புள்
பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்;
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய்;
எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய்;
மடல் ஆர் திரை புரளும் காவிரீ வாய்
வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
கொடி ஆடு நெடு மாடக் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

5

அக்கு, அரவம், அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய்;
அருமறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்;
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய்; சதாசிவன்
காண்; சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்;
மைக் கொள் மயில்-தழை கொண்டு வரும் நீர்ப்பொன்னி
வலஞ்சுழியான் கண்டாய்; மழுவன் கண்டாய்
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

6

சண்டனை நல் அண்டர் தொழச் செய்தான் கண்டாய்;
சதாசிவன் கண்டாய்; சங்கரன் தான் கண்டாய்;
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய்; சுடர்
ஒளி ஆய்த் தொடர்வு அரிது ஆய் நின்றான் கண்டாய்;
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மா
முனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல் தவழ் கொடி மாடக் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

7

அணவு அரியான் கண்டாய்; அமலன் கண்டாய்;
அவி நாசி கண்டாய்; அண்டத்தான் கண்டாய்;
பண மணி மா நாகம் உடையான் கண்டாய்;
பண்டரங்கன் கண்டாய்; பகவன் கண்டாய்;
மணல் வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான்
கண்டாய்; மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

8

விரை கமழும் மலர்க் கொன்றைத் தாரான்
கண்டாய்; வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய்;
அரை அதனில் புள்ளி அதள் உடையான்
கண்டாய்; அழல் ஆடி கண்டாய்; அழகன் கண்டாய்;
வரு திரை நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்;
வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய்
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

9

தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய்;
தசரதன் தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்;
இளம்பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய்;
எட்டு-எட்டு இருங் கலையும் ஆனான் கண்டாய்;
வளம் கிளர் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்;
மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய்
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

10

விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய்; விலங்கலில்
வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்;
தண் தாமரையானும், மாலும், தேடத் தழல் பிழம்பு
ஆய் நீண்ட கழலான் கண்டாய்;
வண்டு ஆர் பூஞ்சோலை வலஞ்சுழியான் கண்டாய்;
மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம்
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.