பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஐந்தாம் தந்திரம் / நிராசாரம்
வ.எண் பாடல்
1

இமையங்களாய் நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமை அறிந்தோம் என்பர் ஆதி பிரானும்
கமை அறிந்தார் உள் கலந்து நின்றானே.

2

பாங்கு அமர் கொன்றைப் படர் சடையான் அடி
தாங்கு மனிதர் தரணியில் நேர் ஒப்பர்
நீங்கிய வண்ணம் நினைவு செய்யாதவர்
ஏங்கி உலகில் இருந்து அழுவாரே.

3

இருந்து அழுவாரும் இயல்பு கெட்டாரும்
அரும் தவம் மேற் கொண்டு அங்கு அண்ணலை எண்ணில்
வருந்தா வகை செய்து வானவர் கோனும்
பெரும் தன்மை நல்கும் பிறப்பு இல்லை தானே.

4

தூர் அறிவாளர் துணைவர் நினைப்பு இலர்
பார் அறிவாளர் படுபயன் தான் உண்பர்
கார் அறிவாளர் கலந்து பிறப்பார்கள்
நீர் அறிவார் நெடு மா முகில் ஆமே

5

அறிவுடன் கூடி அழைத்தது ஓர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்தும்
குறி அது கண்டும் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே.

6

மன்னும் ஒருவன் மருவும் மனோ மயன்
என்னின் மனிதர் இகழ்வர் இவ் ஏழைகள்
துன்னி மனமே தொழுமின் துணை இலி
தன்னையும் அங்கே தலைப் படல் ஆமே.

7

ஓங்காரத்து உள் ஒளி உள்ளே உதயம் உற்று
ஆங்காரம் அற்ற அனுபவம் கை கூடார்
சாங்காலம் உன்னார் பிறவாமை சார் உறார்
நீங்காச் சமயத்துள் நின்று ஒழிந்தார்களே.