பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஆறாம் தந்திரம் / ஞாதுரு ஞான ஞேயம்
வ.எண் பாடல்
1

நீங்காச் சிவ ஆனந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கு ஆன பாசம் படரா படரினும்
ஆங்காரம் நீங்கி அதன் நிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலை பெறல் ஆமே.

2

ஞேயத்தே நின்றோர்க்கு ஞான ஆதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடு ஆகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை உற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவு அறிவாறே.

3

தான் என்று அவன் என்று இரண்டு ஆகும் தத்துவம்
தான் என்று அவன் என்று இரண்டும் தனில் கண்டு
தான் என்ற பூவை அவன் அடி சாத்தினால்
நான் என்று அவன் என்கை நல்லது ஒன்று அன்றே.

4

வைச்சன வாறு ஆறு மாற்றி எனை வைத்து
மெச்சப் பரன்தன் வியாத்துவம் மேல் இட்டு
நிச்சயம் ஆக்கிச் சிவம் ஆக்கி ஞேயத்தால்
அச்சம் கெடுத்து என்னை ஆண்டனள் நந்தியே.

5

முன்னை அறிவு அறியாத அம் மூடர் போல்
பின்னை அறிவு அறியாமையைப் பேதித்தான்
தன்னை அறியப் பரன் ஆக்கித் தன்சிவத்து
என்னை அறிவித்து இருந்தனன் நந்தியே.

6

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாத அந்தப் போதமும்
காணாய் என வந்து காட்டினன் நந்தியே.

7

மோனம் கை வந்தோர்க்கு முத்தியும் கை கூடும்
மோனம் கை வந்தோர்க்குச் சித்தியும் முன் நிற்கும்
மோனம் கை வந்து ஊமையாம் மொழி முற்றும் காண்
மோனம் கை வந்து ஐங் கருமமும் முன்னுமே.

8

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றின் பால்
வைத்த கலை கால் நான் மடங்கான் மாற்றி
உய்த் தவத்து ஆனந்தத்து ஒண் குரு பாதத்தே
பெத்தம் அறுத்தோர் பிறந்து இறவாரே.

9

மேலைச் சொரூபங்கள் மூன்று மிகு சத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானி
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்து அற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.