பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஆறாம் தந்திரம் / அபக்குவன்
வ.எண் பாடல்
1

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே.

2

மனத்தில் எழுந்தது ஓர் மாயக் கண்ணாடி
நினைப்பின் அதனின்ல் நிழலையும் காணார்
வினைப் பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக் கடை இச்சித்துப் போகின்ற வாறே.

3

ஏய் எனில் என் என மாட்டார் பிரசைகள்
வாய் முலை பெய்ய மதுர நின்று ஊறிடும்
தாய் முலை ஆவது அறியார் தமர் உளோர்
ஊன் நிலை செய்யும் உரு இலிதானே.

4

வாய் ஒன்று சொல்லி மனம் ஒன்று சிந்தித்து
நீ ஒன்று செய்யல் உறுதி நெடும் தகாய்
தீ என்று இங்கு உன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேய் என்று இங்கு என்னைப் பிறர் தெளியாரே.

5

பஞ்சத் துரோகத்துப் பாதகர் தம்மை
அஞ்சச் சமயத்தோர் வேந்தன் அரும் தண்டம்
விஞ்சச் செய்து இப்புவி வேறே விடா விடில்
பஞ்சத்து உளாய்ப் புவி முற்றும் பாழ் ஆகுமே.

6

தவத்து இடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம்
சிவத்து இடை நின்றது தேவர் அறியார்
தவத்து இடை நின்று அறியாதவர் எல்லாம்
பவத்து இடை நின்றது ஓர் பாடு அது ஆமே.

7

கன்றலும் கருதலும் கருமம் செய்தலும்
நின்றலும் சுவைத்தலும் தீமை செய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்று இவை இறை பால் இயற்கை அல்லவே.

8

விடிவது அறியார் வெளி காண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியது ஓர் உண்மை கட்டு மின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கு அது ஆமே.

9

வைத்த பசு பாச மாற்று நெறி வைகிப்
பெத்தம் அற முத்தன் ஆகிப் பிறழ் உற்றுத்
தத்துவம் உன்னித் தலைப் படாது அவ்வாறு
பித்து ஆன சீடனுக்கு ஈயப் பெறாது ஆனே.

10

மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான்
துன்னிய காமம் ஆதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான்
அன்னியன் ஆவன் அசல் சீடன் ஆமே.