பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அகாரம் முதலாய் அனைத்தும் ஆய் நிற்கும் உகாரம் முதல் ஆய் உயிர்ப்பு எய்து நிற்கும் அகார உகாரம் இரண்டும் அறியில் அகார உகாரம் இலிங்கம் அது ஆமே.
ஆதாரம் மாதேயம் ஆகின்ற விந்துவும் மேதாதி நாதமும் மீதே விரிந்தன ஆதார விந்து அதி பீட நாதமே போதா இலிங்கப் புணர்ச்சி அது ஆமே.
சத்தி சிவம் ஆம் இலிங்கமே தாபரம் சத்தி சிவம் ஆம் இலிங்கமே சங்கமம் சத்தி சிவம் ஆம் இலிங்கம் சதாசிவம் சத்தி சிவம் ஆகும் தாபரம் தானே.
தான் நேர் எழுகின்ற சோதியைக் காணலாம் வான் நேர் எழுகின்ற ஐம்பதம் அமர்ந்திடம் பூ நேர் எழுகின்ற பொன் கொடி தன்னுடன் தான் நேர் எழுகின்ற வகாரம் அது தாமே.
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கம் ஆம் விந்து அதே பீட நாத இலிங்கம் ஆம் அந்த இரண்டையும் ஆதார தெய்வம் ஆய் வந்த கரு ஐந்தும் செய்யும் அவை ஐந்தே.
சத்தி நல் பீடம் தகுநல்ல ஆன்மா சத்தி நல் கண்டம் தகு வித்தை தான் ஆகும் சத்தி நல் லிங்கம் தகும் சிவ தத்துவம் சத்தி நல் ஆன்மாச் சதா சிவம் தானே.
மனம் புகுந்து என் உயிர் மன்னிய வாழ்க்கை மனம் புகுந்து இன்பம் பொழிகின்ற போது நலம் புகுந்து என்னொடு நாதனை நாடும் இலம் புகுந்து ஆதியும் மேல் கொண்டவாறே.
பராபரன் எந்தை பனி மதி சூடி தராபரன் தன் அடியார் மனக் கோயில் சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும் மராமரன் மன்னி மனத்து உறைந்தானே.
பிரான் அல்ல நாம் எனில் பேதை உலகம் குரால் என்னும் என் மனம் கோயில் கொள் ஈசன் அரா நின்ற செம் சடை அங்கியும் நீரும் பொரா நின்றவர் செய்யப் புண்ணியன் தானே.
அன்று நின்றான் கிடந்தான் அவன் என்று சென்று நின்று எண்திசை ஏத்துவர் தேவர்கள் என்று நின்று ஏத்துவன் எம் பெருமான் தனை ஒன்றி என் உள்ளத்தின் உள் இருந்தானே.