பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஏழாம் தந்திரம் / பசு இலக்கணம் - பிராணன்
வ.எண் பாடல்
1

உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னும் மறைகள் பயிலும் பரமனை
என் உள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயம் என்று அறிந்து கொண்டேனே.

2

அன்னம் இரண்டு உள ஆற்றங் கரையினில்
துன்னி இரண்டும் துணைப் பிரியாது அன்ன
தன்னிலை அன்னம் தனி ஒன்று அது என்றக் கால்
பின்ன மட அன்னம் பேறு அணு காதே.

3

வைகரி ஆதியும் மாயா மலா தியும்
பொய் கரி ஆன புருட ஆதி பேதமும்
மெய் கரி ஞானம் கிரியா விசேடத்துச்
செய் கரி ஈசன் அனாதியே செய்ததே.

4

அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார் கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

5

படர் கொண்ட ஆல் அதின் வித்து அது போலச்
சுடர் கொண்ட அணுவினைத் தூவழி செய்ய
இடர் கொண்ட பாச இருள் அற ஓட்டி
நடர் கொண்ட நல்வழி நாடலும் ஆமே.

6

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணு அற நின்ற கலப்பது உணரார்
இணை இலி ஈசன் அவன் எங்கும் ஆகித்
தணிவு அற நின்றான் சராசரம் தானே.

7

மேவிய சீவன் வடிவு அது சொல்லிடில்
கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறு இட்டு
மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறு ஆயிரத்து ஒன்றே.

8

உண்டு தெளிவன் உரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணம் இல்லை ஆயினும்
பண்டு பயிலும் பயில் சீவனார் பின்னைக்
கண்டு சிவன் உருக் கொள்வர் கருத்து உளே

9

மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து
ஆய குரு அருளாலே அதில் தூண்ட
ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர்
ஆய துரியம் புகுந்து அறிவு ஆகவே.

10

கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறி கட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும்
மற்றைப் பசுக்கள் வறள் பசு தானே.

11

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வது என்
எல்லை கடப்பித்து இறைவன் அடி கூட்டி
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே.

12

சீவன் எனச் சிவன் என்ன வேறு இல்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனாய் இட்டு இருப்பரே.

13

குண விளக்கு ஆகிய கூத்தப் பிரானும்
மண விளக்கு ஆகிய மன் உயிர்க்கு எல்லாம்
பண விளக்கு ஆகிய பல் தலை நாகம்
கண விளக்கு ஆகிய கண் காணி ஆகுமே.

14

அறிவாய் அறியாமை நீங்கி அவனே
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன்
அறிவாய் அவற்றின் உள் தானா அறிவன்
செறிவு ஆகி நின்ற அச் சீவனும் ஆகுமே.

15

ஆறு ஆறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறு ஆறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி
ஆறு ஆறின் தன்மை அருளால் அறிந்தபின்
ஆறு ஆறுக்கு அப்புறம் ஆகி நின்றானே.

16

சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார்
அவம் ஆம் மலம் ஐந்தும் ஆவது அறியா
தவம் ஆன செய்து தலைப் பறிகின்றார்
நவம் ஆன தத்துவம் நாட கிலாரே.

17

நாள் தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார்
நாள் தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார்
நாள் தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கல் ஆல்
நாள் தோறும் நாடார்கள் நாள் வினை யாளரே.