பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / அவா அறுத்தல்
வ.எண் பாடல்
1

வாசியும் மூசியும் பேசி வகையினால்
பேசி இருந்து பிதற்றிப் பயன் இல்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே.

2

மாடத்து உளான் அலன் மண்டபத்தான் அலன்
கூடத்து உளான் அலன் கோயில் உள்ளான் அலன்
வேடத்து உளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில்
மூடத்து உளே நின்று முத்தி தந்தானே.

3

ஆசை அறுமின் கள் ஆசை அறுமின் கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள்
ஆசை விட விட ஆனந்தம் ஆமே.

4

அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
படுவழி செய்கின்ற பற்று அற வீசி
விடுவது வேட்கையை மெய்ந் நின்ற ஞானம்
தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.

5

உவாக் கடல் ஒக்கின்ற ஊழியும் போன
துவாக் கடல் உட் பட்டுத் துஞ்சினர் வானோர்
அவாக் கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர்
தவாக் கடல் ஈசன் தரித்து நின்றானே.

6

நின்ற வினையும் பிணியும் நெடும் செயல்
துன் தொழில் அற்றுச் சுத்தம் அது ஆகலும்
பின்றை அம் கருமமும் பேர்த்து அருள் நேர் பெற்றுத்
துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே.

7

உண்மை உணர்ந்து உற ஒண் சித்தி முத்தி ஆம்
பெண் மயல் கெட்டு அறப் பேறு அட்ட சித்தி ஆம்
திண்மையின் ஞானி சிவ காயம் கை விட்டால்
வண்மை அருள்தான் அடைந்து அன்பில் ஆறுமே.

8

அவன் இவன் ஈசன் என்று அன்பு உற நாடிச்
சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார்
பவன் இவன் பல் வகையாம் இப் பிறவி
புவன் இவன் போவது பொய் கண்ட போதே.

9

கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும்
பதிக்கின்ற வாறு இந்தப் பார் அகம் முற்றும்
விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம்
நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே.