பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / சூக்கும பஞ்சாக்கரம்
வ.எண் பாடல்
1

எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகு மனத்தர் ஆய்த்
தெளிய ஓதிச் சிவாய நம என்னும்
குளிகை இட்டுப் பொன் ஆக்குவன் கூட்டையே.

2

சிவன் சத்தி சீவன் செறு மல மாயை
அவம் சேர்த்த பாச மலம் ஐந்து அகலச்
சிவன் சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம் சேர்த்த பாசம் அணுக கிலாவே.

3

சிவன் அருள் ஆய சிவன் திரு நாமம்
சிவன் அருளான் மாத் திரோத மலமாயை
சிவன் முதல் ஆகச் சிறந்து நிரோதம்
பவம் அது அகன்று பரசிவன் ஆமே.

4

ஓதிய நம் மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்
வாதி தனை விட்டு இறை அருள் சத்தியால்
தீது இல் சிவஞான யோகமே சித்திக்கும்
ஓதும் சிவாய மலம் அற்ற உண்மையே.

5

தெள்ளமுது ஊறச் சிவாய நம என்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பி உண்ணாதவர்
துள்ளிய நீர்போல் சுழல்கின்றவாறே.

6

நம ஆதி நனஆதி திரோதாயி ஆகித்
தம் ஆதியாய் நிற்கத் தான் அந்தத்து உற்றுச்
சமாதித் துரியம் தமது ஆகம் ஆகவே
நமஆதி சமாதி சிவ ஆதல் எண்ணவே.

7

அருள் தரு மாயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவள் உள்ளுறு மாயை
திரி மலம் நீங்கிச் சிவாய என்று ஓதும்
அருவினை தீர்ப்பதும் அவ் எழுத்து ஆமே.

8

சிவ சிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவ சிவ வாயுவும் தேர்ந்து உள் அடங்கச்
சிவ சிவ ஆய தெளிவின் உள்ளார்கள்
சிவ சிவ ஆகும் திரு அருள் ஆமே.

9

சிவ சிவ என்கிலர் தீ வினை யாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.

10

நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவம் என்னும் நாமத்தைச் சிந்தை உள் ஏற்றப்
பவம் அது தீரும் பரிசும் அது அற்றால்
அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ.