பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

முதல் தந்திரம் / கள்ளுண்ணாமை
வ.எண் பாடல்
1

கழுநீர்ப் பசுப் பெறில் கயம் தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத் தம் காயம் சுருக்கும்
முழுநீர்க் கள் உண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன் தன் சிவ ஆனந்தத் தேறலே.

2

சித்தம் உருக்கிச் சிவம் ஆம் சமாதியில்
ஒத்த சிவ ஆனந்தத்து ஓவாத தேறலைச்
சுத்த மது உண்ணச் சுவ ஆனந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே.

3

காமமும் கள்ளும் கலதி கட்கே ஆகும்
மா மலமும் சமயத்துள் மயல் உறும்
போ மதி ஆகும் புனிதன் இணை அடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே.

4

வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர்
காமத்தோர் காமக் கள் உண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.

5

உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வு உறார்
தெள் உண்மை ஞானச் சிவயோகம் சேர் உறார்
கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே.

6

மயக்கும் சமய மலம் மன்னு மூடர்
மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார்
மயக்கு உறு மா மாயையை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்கு உறும் அன்றே.

7

மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார் தம் இன்பமே எய்தி
முயங்கும் நயம் கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே.

8

இராப் பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கு அற ஆனந்தத் தேறல் பருகார்
இராப் பகல் அற்ற இறை அடி இன்பத்து
இராப் பகல் மாயை இரண்டு இடத்தேனே.

9

சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள் உண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவ ஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே.

10

சத்தன் அருள் தரில் சத்தி அருள் உண்டாம்
சத்தி அருள் தரில் சத்தன் அருள் உண்டாம்
சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்கச்
சத்தியம் எண் சித்தித் தன்மையும் ஆமே.

11

தத்துவம் நீக்கி மருள் நீக்கித் தான் ஆகிப்
பொய்த்தவம் நீக்கி மெய்ப் போகத்துள் போகியே
மெய்த்த சகம் உண்டு விட்டுப் பரானந்தச்
சித்தி அது ஆக்கும் சிவ ஆனந்தத் தேறலே.

12

யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண் சித்தி
மோகியர் கள் உண்டு மூடராய் மோகம் உற்று
ஆகும் மதத்தால் அறிவு அழிந்தாரே.