பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / காத்தல்
வ.எண் பாடல்
1

புகுந்து நின்றான் வெளியாய் இருள் ஆகிப்
புகுந்து நின்றான் புகழ் வாய் இகழ்வாகிப்
புகுந்து நின்றான் உடலாய் உயிராகிப்
புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே.

2

தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல் மலை ஆதியும் ஆய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.

3

உடலாய் உயிராய் உலகம் அது ஆகிக்
கடலாய்க் கார் முகில் நீர் பொழிவானாய்
இடையாய் உலப்பு இலி எங்கும் தான் ஆகி
அடையார் பெருவழி அண்ணல் நின்றானே.

4

தான் ஒரு காலம் தனிச் சுடராய் நிற்கும்
தான் ஒரு கால் சண்ட மாருதமாய் நிற்கும்
தான் ஒரு காலம் தண் மழையாய் நிற்கும்
தான் ஒரு காலம் தண் மாயனும் ஆமே.

5

அன்பும் அறிவும் அடக்கமுமாய் நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய் நிற்கும்
முன்புறு காலமும் ஊழியுமாய் நிற்கும்
அன்புற ஐந்தில் அமர்ந்து நின்றானே.

6

உற்று வனைவான் அவனே உலகினைப்
பெற்று வனைவான் அவனே பிறவியைச்
சுற்றிய சாலும் குடமும் சிறுதூதை
மற்றும் அவனே வனைய வல்லானே.

7

உள் உயிர்ப்பாய் உடல் ஆகி நின்றான் நந்தி
வெள் உயிராகும் வெளியாய் நிலம் கொளி
உள் உயிர்க்கும் உணர்வே உடல் உள் பரந்து
தள் உயிரா வண்ணம் தாங்கி நின்றானே.

8

தாங்கரும் தன்மையும் தான் அவை பல் உயிர்
வாங்கிய காலத்து மற்றோர் பிறிது இல்லை
ஓங்கி எழுமைக்கும் யோகாந்தம் அவ்வழி
தாங்கி நின்றானும் அத் தாரணி தானே.

9

அணுகினும் சேயவன் அங்கியில் கூடி
நணுகினும் ஞானக் கொழுந்து ஒன்று நல்கும்
பணிகினும் பார்மிசைப் பல் உயிராகித்
தணிகினும் மண்ணுடல் அண்ணல் செய்வானே.