பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஐந்தாம் தந்திரம் / மார்க்க சைவம்
வ.எண் பாடல்
1

பொன்னால் சிவ சாதனம் பூதி சாதனம்
நன் மார்க்க சாதனம் மா ஞான சாதனம்
துன் மார்க்க சாதனம் தோன்றாத சாதனம்
சன் மார்க்க சாதனம் ஆம் சுத்த சைவர்க்கே.

2

கேடு அறு ஞானி கிளர் ஞான பூபதி
பாடு அறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடு உறு ஞான உதய உண்மை முத்தியோன்
பாடு உறு சுத்த சைவப் பத்த நித்தனே.

3

சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர் ஏழும்
சத்தும் அசத்தும் தணந்த பரா பரை
உய்த்த பரா பரை உள்ளாம் பராபரை
அத்தன் அருள் சத்தியாய் எங்கும் ஆமே.

4

சத்தும் அசத்தும் தணந்தவர் தான் ஆகிச்
சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகம் ஆய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்
சித்தியும் அங்கே சிறந்து உள தானே.

5

தன்னைப் பரனைச் சதா சிவன் என்கின்ற
மன்னைப் பதி பசு பாசத்தை மாசு அற்ற
முன்னைப் பழ மல முன் கட்டை வீட்டினை
உன்னத் தகும் சுத்த சைவர் உபாயமே.

6

பூரணம் தன்னிலே வைத்து அற்ற அப்போதம்
ஆரணம் அந்தம் மதித்து ஆனந்தந்தோடு
நேர் என ஈர் ஆறு நீதி நெடும் போகம்
காரணம் ஆம் சுத்த சைவர்க்குக் காட்சியே.

7

மாறாத ஞான மதிப்பு அற மாயோகம்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவம் ஆக்கிப்
பேறு ஆன பாவனை பேணி நெறி நிற்றல்
கூறு ஆகும் ஞானி சரிதை குறிக்கிலே.

8

வேத அந்தம் கண்டோர் பிரமம் இத்தியா தரர்
நாத அந்தம் கண்டோர் நடுக்கு அற்ற யோகிகள்
வேத அந்தம் அல்லாத சித்தாந்தம் கண்டு உள்ளோர்
சாதாரணம் அன்ன சைவர் உபாயமே.

9

விண்ணினைச் சென்று அணுகா வியன் மேகங்கள்
கண்ண்னைச் சென்று அணுகாப் பல காட்சிகள்
எண்ணினைச் சென்று அணுகாமல் எணப்படும்
அண்ணலைச் சென்று அணுகா பசு பாசமே.

9

விண்ணினைச் சென்று அணுகா வியன் மேகங்கள்
கண்ண்னைச் சென்று அணுகாப் பல காட்சிகள்
எண்ணினைச் சென்று அணுகாமல் எணப்படும்
அண்ணலைச் சென்று அணுகா பசு பாசமே.

10

ஒன்றும் இரண்டும் இலதும் ஆய் ஒன்று ஆக
நின்று சமய நிரா கார நீங்கியே
நின்று பரா பரை நேயத்தைப் பாதத்தால்
சென்று சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே.