பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சூதம் நெருங்கு குலைத் தெங்கு பலவு பூகம் சூழ்பு உடைத்தாய் வீதிதோறும் நீற்றின் ஒளி விரிய மேவி விளங்கு பதி நீதி வழுவா நெறியினராய் நிலவும் குடியால் நெடு நிலத்து மீது விளங்கும் தொன்மையது மிழலை நாட்டுப் பெருமிழலை.
அன்ன தொன்மைத் திருப்பதிக் கண் அதிபர் மிழலைக் குறும்பனார் சென்னி மதி அம் வைத்தவர் தம் அடியார்க்கு ஆன செய் பணிகள் இன்ன வண்ணம் என்று அவர் தாம் உரையா முன்னம் எதிர் ஏற்று முன்னம் உணர்ந்து செய்வாராய் முதிரும் அறிவின் பயன் கொள்வார்.
தொண்டர் பலரும் வந்து ஈண்டி உண்ணத் தொலையா அமுது ஊட்டிக் கொண்டு செல்ல வரு நிதியம் முகந்து கொடுத்துக் குறைந்து அடைவார் வண்டு மருவும் குழல் உமையாள் கேள்வன் செய்ய தாள் என்னும் புண்ட ரீகம் அக மலரில் வைத்துப் போற்றும் பொற்பினார்.
இத் தன்மையராய் நிகழும் நாள் எல்லை இல்லாத் திருத் தொண்டின் மெய்த் தன்மையினை உலகு அறிய விதியால் வணங்கி மெய் அடியார் சித்தம் நிலவும் திருத் தொண்டத் தொகை பாடிய நம்பியைப் பணிந்து நித்தன் அருள் பெற்றவர் பாதம் நினைக்கும் நியமத் தலை நின்றார்.
மை ஆர் தடங்கண் பரவையார் மணவாளன் தன் மலர்க் கழல்கள் கையால் தொழுது வாய் வாழ்த்தி மனத்தால் நினைக்கும் கடப் பாட்டில் செய்யாள் கோனும் நான்முகனும் அறியாச் செம்பொன் தாள் இணைக் கீழ் உய்வான் சேர உற்ற நெறி இதுவே என்று அன்பினில் உய்த்தார்.
நாளும் நம்பி ஆரூரர் நாமம் நவின்ற நலத்தாலே ஆளும் படியால் அணி மாதி சித்தியான அணைந்த அதன்பின் மூளும் காதலுடன் பெருக முதல்வர் நாமத்து அஞ்சு எழுத்தும் கேளும் பொருளும் உணர்வும் ஆம் பரிசு வாய்ப்பக் கெழுமினார்.
இன்ன வாறே இவர் ஒழுக ஏறு கொடி மேல் உயர்த்தவர் தம் பொன்னங் கழல்கள் மண்ணின் மேல் பொருந்த வந்து வழக்கு உரைத்து மன்னும் ஓலை அவை முன்பு காட்டி ஆண்டவன் தொண்டர் சென்னி மதி தோய் மாடம் மலி கொடுங் கோளூரைச் சேர்வு உற்றார்.
அஞ்சைக் களத்து நஞ்சு உண்ட அமுதைப் பரவி அணை உறுவார் செஞ்சொல் தமிழ் மாலைகள் மொழியத் தேவர் பெருமான் அருளாலே மஞ்சில் திகழும் வட கயிலைப் பொருப்பில் எய்த வரும் வாழ்வு நெஞ்சில் தெளிய இங்கு உணர்ந்தார் நீடு மிழலைக் குறும்பனார்.
மண்ணில் திகழும் திரு நாவலூரில் வந்த வன் தொண்டர் நண்ணற்கு அரிய திருக் கயிலை நாளை எய்த நான் பிரிந்து கண்ணிர்கு அரிய மணி கழிய வாழ்வோர் போல வாழேன் என்று எண்ணிச் சிவன் தாள் இன்றே சென்று அடைவன் யோகத்தால் என்பார்.
நாலு கரணங்களும் ஒன்றாய் நல்ல அறிவு மேற் கொண்டு காலும் பிரம நாடி வழிக் கருத்துச் செலுத்தக் கபால நடு ஏலவே முன் பயின்ற நெறி எடுத்த மறை மூலம் திறப்ப மூல முதல்வர் திருப் பாதம் அணைவார் கயிலை முன் அணைந்தார்.
பயிலைச் செறிந்த யோகத்தால் பரவை கேள்வன் பாதம் உறக் கயிலைப் பொருப்பர் அடி அடைந்த மிழலைக் குறும்பர் கழல் வணங்கி மயிலைப் புறம் கொள் மென் சாயல் மகளிர் கிளவி யாழினொடும் குயிலைப் பொருவும் காரைக்கால் அம்மை பெருமை கூறுவாம்.