பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

கணம்புல்ல நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெரும் குடி நெருங்கிப்
பெருக்கு வட வெள் ஆற்றுத் தென் கரைப்பால் பிறங்கு பொழில்
வருக்கை நெடும் சுளை பொழிதேன் மடு நிறைத்து வயல் விளைக்கும்
இருக்கு வேளூர் என்பது இவ் உலகில் விளங்கும் பதி.

2

அப்பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு இறந்த
எப்பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார்;
ஒப்பு இல் பெரும் குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார்;
மெய்ப் பொருள் ஆவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார்.

3

தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று
ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயில் உள் எரித்து,
நா ஆரப் பரவுவார்; நல்குரவு வந்து எய்தத்
தேவாதி தேவர்பிரான் திருத்தில்லை சென்று அடைந்தார்.

4

தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள்
அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த
வில்லியார் திருப் புலீச் சரத்தின் கண் விளக்கு எரிக்க
இல் இடை உள்ளன மாறி எரித்துவரும் அந்நாளில்.

5

ஆய செயல் மாண்ட அதன்பின் அயல் அவர் பால் இரப்புஅஞ்சிக்
காய முயற்சியில் அரிந்த கணம் புல்லுக் கொடு வந்து,
மேய விலைக்குக் கொடுத்து, விலைப் பொருளால் நெய்மாறித்
தூயதிரு விளக்கு எரித்தார்; துளக்குஅறு மெய்த் தொண்டனார்.

6

இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள்
மெய் வருந்தி அரிந்து எடுத்துக் கொடுவந்து விற்கும்புல்
எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இப்பணி ஒழியார்;
அவ் அரிபுல் லினைமாட்டி அணி விளக்கு ஆய்இட எரிப்பார்.

7

முன்பு திருவிளக்கு எரிக்கும் முறையாமம் குறையாமல்
மென் புல்லும் விளக்கு எரிக்கப் போதாமை, மெய்யான
அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை
என்பு உருக மடுத்து எரித்தார்; இருவினையின் தொடக்கு எரித்தார்.

8

தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலைத் திருவிளக்குப்
பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத்தொண்டருக்கு
மங்கலம் ஆம் பெரும் கருணை வைத்து அருளச் சிவலோகத்து
எங்கள் பிரான் கணம் புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்துஇருந்தார்

9

மூரியார் கலி உலகின் முடி இட்ட திருவிளக்குப்
பேரி ஆறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி
வேரியார் மலர்ச் சோலை விளங்கு திருக்கடவூரில்
காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டு உரைப்பாம்.