பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருஉந்தியார்
வ.எண் பாடல்
1

வளைந்தது வில்லு; விளைந்தது பூசல்;
உளைந்தன முப்புரம் உந்தீ பற!
ஒருங்கு உடன் வெந்தவாறு உந்தீ பற!

2

ஈர் அம்பு கண்டிலம், ஏகம்பர் தம் கையில்;
ஓர் அம்பே முப்புரம் உந்தீ பற!
ஒன்றும் பெரு மிகை உந்தீ பற!

3

தச்சு விடுத்தலும், தாம் அடியிட்டலும்,
அச்சு முறிந்தது என்று உந்தீ பற!
அழிந்தன முப்புரம் உந்தீ பற!

4

உய்ய வல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற!
இள முலை பங்கன் என்று உந்தீ பற!

6

ஆ! ஆ! திருமால், அவிப் பாகம் கொண்டு, அன்று,
சாவாது இருந்தான் என்று உந்தீ பற!
சதுர்முகன் தாதை என்று உந்தீ பற!

7

வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று உந்தீ பற!
கலங்கிற்று வேள்வி என்று உந்தீ பற!

8

பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பது என்னே? ஏடி! உந்தீ பற!
பணை முலை பாகனுக்கு உந்தீ பற!

9

புரந்தரனார் ஒரு பூம் குயில் ஆகி,
மரம் தனில் ஏறினார் உந்தீ பற!
வானவர் கோன் என்றே உந்தீ பற!

10

வெம் சின வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சினவா பாடி உந்தீ பற!
தொடர்ந்த பிறப்பு அற உந்தீ பற!

11

ஆட்டின் தலையை விதிக்குத் தலை ஆகக்
கூட்டியவா பாடி உந்தீ பற!
கொங்கை குலுங்க நின்று உந்தீ பற!

12

உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே,
கண்ணைப் பறித்தவாறு உந்தீ பற!
கருக் கெட, நாம் எல்லாம் உந்தீ பற!

13

நா மகள் நாசி, சிரம் பிரமன், பட,
சோமன் முகம் நெரித்து உந்தீ பற!
தொல்லை வினை கெட உந்தீ பற!

14

நான்மறையோனும், மகத்து இயமான், பட,
போம் வழி தேடும் ஆறு உந்தீ பற!
புரந்தரன் வேள்வியில் உந்தீ பற!

15

சூரியனார் தொண்டை வாயினில் பற்களை
வாரி, நெரித்த ஆறு உந்தீ பற!
மயங்கிற்று வேள்வி என்று உந்தீ பற!

16

தக்கனார், அன்றே, தலை இழந்தார்; தக்கன்
மக்களைச் சூழ நின்று உந்தீ பற!
மடிந்தது வேள்வி என்று உந்தீ பற!

17

பாலகனார்க்கு, அன்று பால் கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீ பற!
குமரன் தன் தாதைக்கே உந்தீ பற!

5

சாடிய வேள்வி சரிந்திட, தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீ பற!
உருத்திர நாதனுக்கு உந்தீ பற!

18

நல்ல மலரின்மேல் நான்முகனார் தலை
ஓல்லை அரிந்தது என்று உந்தீ பற!
உகிரால் அரிந்தது என்று உந்தீ பற!

19

தேரை நிறுத்தி, மலை எடுத்தான் சிரம்
ஈர் ஐந்தும் இற்ற ஆறு உந்தீ பற!
இருபதும் இற்றது என்று உந்தீ பற!

20

ஏகாச மிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவல் என்று உந்தீபற!
அதற்கு அப்பாலும் காவல் என்று உந்தீபற!