பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும்
நீயும் போய் பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ?
விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ?
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி
திகழும் அம்பலத்தை மன்னிக் கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ? பின்னோ?
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.