தோளா முத்தச் சுடரே, போற்றி!
ஆள் ஆனவர்கட்கு அன்பா, போற்றி!
ஆரா அமுதே, அருளே, போற்றி!
பேர் ஆயிரம் உடைப் பெம்மான், போற்றி!
தாளி அறுகின் தாராய், போற்றி!
நீள் ஒளி ஆகிய நிருத்தா, போற்றி!
சந்தனச் சாந்தின் சுந்தர, போற்றி!
சிந்தனைக்கு அரிய சிவமே, போற்றி!
மந்திர மா மலை மேயாய், போற்றி!
எம் தமை உய்யக் கொள்வாய், போற்றி!
புலி முலை புல்வாய்க்கு அருளினை, போற்றி!
அலை கடல் மீமிசை நடந்தாய், போற்றி!
கருங்குருவிக்கு அன்று அருளினை, போற்றி!
இரும் புலன் புலர இசைந்தனை, போற்றி!
படி உறப் பயின்ற பாவக, போற்றி!
அடியொடு, நடு, ஈறு, ஆனாய், போற்றி!
நரகொடு, சுவர்க்கம், நால் நிலம், புகாமல்,
பர கதி பாண்டியற்கு அருளினை, போற்றி!
ஒழிவு அற நிறைந்த ஒருவ, போற்றி!
செழு மலர்ச் சிவபுரத்து அரசே, போற்றி!
கழுநீர் மாலைக் கடவுள், போற்றி!
தொழுவார் மையல் துணிப்பாய், போற்றி!
பிழைப்பு, வாய்ப்பு, ஒன்று அறியா நாயேன்
குழைத்த சொல் மாலை கொண்டருள், போற்றி!
புரம் பல எரித்த புராண, போற்றி!
பரம் பரம் சோதிப் பரனே, போற்றி!
போற்றி! போற்றி! புயங்கப் பெருமான்!
போற்றி! போற்றி! புராண காரண!
போற்றி! போற்றி! சய, சய, போற்றி!
சிவ.அ.தியாகராசன்