பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில்
வ.எண் பாடல்
1

எரிதர அனல் கையில் ஏந்தி, எல்லியில்,
நரி திரி கான் இடை, நட்டம் ஆடுவர்
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே

2

மைய கண் மலைமகள் பாகம் ஆய், இருள
கையது ஓர் கனல்-எரி கனல ஆடுவர்
ஐய நன் பொரு புனல் அம்பர், செம்பியர்
செய்யகண் இறை செய்த கோயில் சேர்வரே.

3

மறை புனை பாடலர், சுடர் கை மல்க, ஓர்
பிறை புனை சடைமுடி பெயர, ஆடுவர்
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர்
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே.

4

இரவு மல்கு இளமதி சூடி, ஈடு உயர்
பரவ மல்கு அருமறை பாடி, ஆடுவர்
அரவமோடு உயர் செம்மல் அம்பர், கொம்பு அலர்
மரவம் மல்கு எழில் நகர், மருவி வாழ்வரே.

5

சங்கு அணி குழையினர், சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி ஆடுவர்
அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர்
செங்கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே.

6

கழல் வளர் காலினர், சுடர் கை மல்க, ஓர்
சுழல் வளர் குளிர்புனல் சூடி, ஆடுவர்
அழல் வளர் மறையவர் அம்பர், பைம்பொழில்
நிழல் வளர் நெடு நகர், இடம் அது என்பரே.

7

இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே,
பகல் இடம் பலி கொளப் பாடி ஆடுவர்
அகலிடம் மலி புகழ் அம்பர், வம்பு அவிழ்
புகல் இடம் நெடு நகர் புகுவர்போலுமே.

8

எரி அன மணி முடி இலங்கைக்கோன் தன
கரி அன தடக்கைகள் அடர்த்த காலினர்,
அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு
புரியவர், பிரிவு இலாப் பூதம் சூழவே.

9

வெறி கிளர் மலர்மிசையவனும், வெந் தொழில்
பொறி கிளர் அரவு அணைப் புல்கு செல்வனும்,
அறிகில அரியவர் அம்பர், செம்பியர்
செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே.

10

வழி தலை, பறி தலை, அவர்கள் கட்டிய
மொழிதலைப் பயன் என மொழியல்! வம்மினோ!
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர்
உழிதலை ஒழிந்து உளர், உமையும் தாமுமே.

11

அழகரை, அடிகளை, அம்பர் மேவிய
நிழல் திகழ் சடைமுடி நீலகண்டரை,
உமிழ் திரை உலகினில் ஓதுவீர்! கொண்மின்-
தமிழ் கெழு விரகினன் தமிழ்செய்மாலையே!