பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருப்பைஞ்ஞீலி
வ.எண் பாடல்
1

ஆரிடம் பாடலர், அடிகள், காடு அலால்
ஓர் இடம் குறைவு இலர், உடையர் கோவணம்,
நீர் இடம் சடை, விடை ஊர்தி, நித்தலும்
பாரிடம் பணி செயும், பயில் பைஞ்ஞீலியே.

2

மருவு இலார் திரிபுரம் எரிய, மால்வரை,
பரு விலாக் குனித்த பைஞ்ஞீலி மேவலான்,
உரு இலான், பெருமையை உளம் கொளாத அத்
திரு இலார் அவர்களைத் தெருட்டல் ஆகுமே?

3

அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி, தேன்
பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான்-
வெஞ்சுரம்தனில், உமை வெருவ, வந்தது ஓர்
குஞ்சரம் பட, உரி போர்த்த கொள்கையே!

4

கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லைமேல்
பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார்
பேடு அலர், ஆண் அலர், பெண்ணும் அல்லது, ஓர்
ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே!

5

விழி இலா நகுதலை, விளங்கு இளம்பிறை,
சுழியில் ஆர் வருபுனல் சூழல் தாங்கினான்-
பழி இலார் பரவு பைஞ்ஞீலி பாடலான்;
கிழி இலார் கேண்மையைக் கெடுக்கல் ஆகுமே?

6

விடை உடைக் கொடி வலன் ஏந்தி, வெண்மழுப்
படை உடைக் கடவுள் பைஞ்ஞீலி மேவலான்;
துடி இடைக் கலை அல்குலாள் ஓர்பாகமா,
சடை இடைப் புனல் வைத்த சதுரன் அல்லனே!

7

தூயவன், தூய வெண் நீறு மேனிமேல்
பாயவன்-பாய பைஞ்ஞீலி கோயிலா
மேயவன்; வேய் புரை தோளி பாகமா
ஏயவன், எனைச் செயும் தன்மை என்கொலோ?

8

தொத்தின தோள் முடி உடையவன் தலை-
பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான்,
முத்தினை முறுவல் செய்தாள் ஒர்பாகமாப்
பொத்தினன், திருந்து அடி பொருந்தி வாழ்மினே!

9

நீர் உடைப் போது உறைவானும் மாலும் ஆய்,
சீர் உடைக் கழல் அடி சென்னி காண்கிலர்;
பார் உடைக் கடவுள், பைஞ்ஞீலி மேவிய
தார் உடைக்கொன்றை அம் தலைவர், தன்மையே!

10

பீலியார் பெருமையும், பிடகர் நூன்மையும்,
சாலியாதவர்களைச் சாதியாதது, ஓர்
கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ்-
ஞீலியான் கழல் அடி நினைந்து வாழ்மினே!

11

கண் புனல் விளை வயல் காழிக் கற்பகம்
நண்பு உணர் அருமறை ஞானசம்பந்தன்
பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார்
உண்பின உலகினில், ஓங்கி வாழ்வரே.