பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கழிப்பாலை
வ.எண் பாடல்
1

வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்;
எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள்;
கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
அண்ணலே அறிவான், இவள் தன்மையே!

2

மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து
இருந்தவன், கழிப்பாலையுள் எம்பிரான்,
திருந்து சேவடி சிந்தையுள் வைத்து, இவள்,
பரிந்து உரைக்கிலும், என் சொல் பழிக்குமே.

3

மழலைதான் வரச் சொல்-தெரிகின்றிலள்;
குழலின் நேர் மொழி கூறிய கேண்மினோ:
அழகனே! கழிப்பாலை எம் அண்ணலே!
இகழ்வதோ, எனை? ஏன்றுகொள்! என்னுமே.

4

செய்ய மேனி வெண் நீறு அணிவான் தனை
மையல் ஆகி, மதிக்கிலள், ஆரையும்;
கை கொள் வெண் மழுவன், கழிப்பாலை எம்
ஐயனே அறிவான், இவள் தன்மையே.

5

கருத்தனை, கழிப்பாலையுள் மேவிய
ஒருத்தனை, உமையாள் ஒருபங்கனை,
அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று
ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே.

6

கங்கையைச் சடை வைத்து மலைமகள்-
நங்கையை உடனே வைத்த நாதனார்,
திங்கள் சூடி, திருக்கழிப்பாலையான்,
இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே.

7

ஐயனே! அழகே! அனல் ஏந்திய
கையனே! கறை சேர்தரு கண்டனே!
மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம்
ஐயனே, விதியே, அருள்! என்னுமே.

8

பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை,
முத்தனை, முடிவு ஒன்று இலா மூர்த்தியை,
அத்தனை, அணி ஆர் கழிப்பாலை எம்
சித்தனை, சென்று சேருமா செப்புமே!

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை-
அஞ்சும் நான்கும் ஒன்று(ம்) இறுத்தான் அவன்
என் செயான்? கழிப்பாலையுள் எம்பிரான்
துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே.