பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருப்பேரெயில்
வ.எண் பாடல்
1

மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
கறை கொள் கண்டம் உடைய கபாலியார்;
துறையும் போகுவர்; தூய வெண் நீற்றினர்;
பிறையும் சூடுவர்-பேரெயிலாளரே.

2

கணக்கு இலாரையும், கற்று வல்லாரையும்,
வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும்,
தணக்குவார்; தணிப்பார்; எப்பொருளையும்
பிணக்குவார் அவர்-பேரெயிலாளரே.

3

சொரிவிப்பார், மழை; சூழ் கதிர்த் திங்களை
விரிவிப்பார்; வெயில் பட்ட விளங்கு ஒளி
எரிவிப்பார்; தணிப்பார்; எப்பொருளையும்
பிரிவிப்பார் அவர்-பேரெயிலாளரே.

4

செறுவிப்பார், சிலையால் மதில்; தீர்த்தங்கள்
உறுவிப்பார்; பலபத்தர்கள் ஊழ்வினை
அறுவிப்பார்; அது அன்றியும் நல்வினை
பெறுவிப்பார் அவர்-பேரெயிலாளரே.

5

மற்றையார் அறியார்; மழுவாளினார்;
பற்றி ஆட்டி ஓர் ஐந்தலைப்பாம்பு அரைச்
சுற்றியார் அவர்; தூ நெறியால் மிகு
பெற்றியார் அவர்-பேரெயிலாளரே.

6

திருக்கு வார்குழல் செல்வன சேவடி-
இருக்கு வாய்மொழியால்-தனை ஏத்துவார்
சுருக்குவார், துயர்; தோற்றங்கள் ஆற்றறப்
பெருக்குவார் அவர், பேரெயிலாளரே.

7

முன்னையார்; மயில் ஊர்தி முருகவேள்-
தன் ஐயார் எனில்-தான் ஓர் தலைமகன்;
என்னை ஆளும் இறையவன்; எம்பிரான்;
பின்னையார் அவர்-பேரெயிலாளரே.

8

உழைத்தும், துள்ளியும், உள்ளத்துளே உரு
இழைத்தும், எந்தைபிரான் என்று இராப்பகல்
அழைக்கும் அன்பினர் ஆய அடியவர்
பிழைப்பு நீக்குவர்-பேரெயிலாளரே.

9

நீர் உலாம் நிமிர்புன்சடையா!ழு எனா
ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய,
வார் உலாம் வனமென்முலையாளொடும்,
பேர் உளார் அவர்-பேரெயிலாளரே.

10

பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர்;
தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர்;
மாணியாய் மண் அளந்தவன், நான்முகன்,
பேணியார் அவர் பேரெயிலாளரே.

11

மதத்த வாள் அரக்கன் மணிப் புட்பகம்
சிதைக்கவே, திருமாமலைக்கீழ்ப் புக்கு,
பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி
பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே.