பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் கேட்டுப் பள்ளி கண்டீர்! கெடுவீர்; இது ஓட்டுப் பள்ளி விட்டு ஓடல் உறாமுனம், காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!
மாட்டைத் தேடி மகிழ்ந்து, நீர், நும்முளே நாட்டுப் பொய் எலாம் பேசிடும் நாண் இலீர்! கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே, காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே!
தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும் ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே, கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி ஞான நாயகனைச் சென்று நண்ணுமே!
அருத்தமும் மனையாளொடு மக்களும் பொருத்தம் இல்லை; பொல்லாதது போக்கிடும் கருத்தன், கண்ணுதல், அண்ணல், காட்டுப்பள்ளி திருத்தன், சேவடியைச் சென்று சேர்மினே!
சுற்றமும் துணையும், மனைவாழ்க்கையும், அற்றபோது அணையார், அவர் என்று என்றே, கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளிப் பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்மினே!
அடும்பும், கொன்றையும், வன்னியும், மத்தமும், துடும்பல் செய் சடைத் தூ மணிச்சோதியான்; கடம்பன் தாதை; கருதும் காட்டுப்பள்ளி உடம்பினார்க்கு ஓர் உறு துணை ஆகுமே.
மெய்யில் மாசு உடையார், உடல் மூடுவார், பொய்யை மெய் என்று புக்கு உடன் வீழன்மின்! கையில் மான் உடையான், காட்டுப்பள்ளி எம் ஐயன்தன் அடியே அடைந்து உய்மினே!
வேலை வென்ற கண்ணாரை விரும்பி, நீர், சீலம் கெட்டுத் திகையன் மின், பேதைகாள்! காலையே தொழும் காட்டுப்பள்ளி(ய்) உறை நீலகண்டனை நித்தல் நினைமினே!
இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள் ஒன்றும் ஓராது, உழிதரும் ஊமர்காள்! அன்று வானவர்க்கு ஆக விடம் உண்ட கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே!
எண் இலா அரக்கன் மலை ஏந்திட எண்ணி நீள் முடிபத்தும் இறுத்தவன், கண் உளார் கருதும், காட்டுப்பள்ளியை நண்ணுவார் அவர்தம் வினை நாசமே.