பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருச்சோற்றுத்துறை
வ.எண் பாடல்
1

கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
தில்லைச் சிற்றம்பலத்து உறை செல்வனார்,
தொல்லைஊழியர், சோற்றுத்துறையர்க்கே
வல்லை ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

2

முத்தி ஆக ஒரு தவம் செய்திலை;
அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை;
தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே
பத்திஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

3

ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை
கட்டி நின்ற கழிந்து அவை போய் அற,
தொட்டு நின்றும் அச் சோற்றுத்துறையர்க்கே
பட்டிஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

4

ஆதியான், அண்டவாணர்க்கு அருள் நல்கும்
நீதியான் என்றும், நின்மலனே என்றும்,
சோதியான் என்றும், சோற்றுத்துறையர்க்கே
வாதி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

5

ஆட்டினாய், அடியேன் வினை ஆயின
ஓட்டினாய்; ஒரு காதில் இலங்கு வெண்
தோட்டினாய்ழு என்று சோற்றுத்துறையர்க்கே
நீட்டி நீ பணி செய், மட நெஞ்சமே!

6

பொங்கி நின்று எழுந்த(க்) கடல் நஞ்சினைப்
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ? சொலாய்!
தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்குத்
தங்கி நீ பணி செய், மட நெஞ்சமே!

7

ஆணி போல நீ ஆற்ற வலியைகாண்;
ஏணி போல் இழிந்து ஏறியும், ஏங்கியும்,
தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே
பூணி ஆய்ப் பணி செய், மட நெஞ்சமே!

8

பெற்றம் ஏறில் என்? பேய் படை ஆகில் என்?
புற்றில் ஆடு அரவே அது பூணில் என்?
சுற்றி நீ, என்றும் சோற்றுத்துறையர்க்கே
பற்றி, நீ பணி செய், மட நெஞ்சமே!

9

அல்லியான், அரவுஐந்தலை நாக(அ)அணைப்-
பள்ளியான், அறியாத பரிசு எலாம்
சொல்லி, நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே
புல்லி, நீ பணி செய், மட நெஞ்சமே!

10

மிண்டரோடு விரவியும் வீறு இலாக்
குண்டர் தம்மைக் கழிந்து உய்யப் போந்து, நீ
தொண்டு செய்து, என்றும் சோற்றுத்துறையர்க்கே
உண்டு, நீ பணி செய், மட நெஞ்சமே!

11

வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்தனை
ஆழ்ந்து போய் அலற(வ்) விரல் ஊன்றினான்,
சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே
தாழ்ந்து நீ பணி செய், மட நெஞ்சமே!