பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவெண்காடு
வ.எண் பாடல்
1

தூண்டு சுடர் மேனித் தூநீறு ஆடி, சூலம் கை ஏந்தி,
ஓர் சுழல் வாய் நாகம்
பூண்டு, பொறி அரவம் காதில் பெய்து, பொன்சடைகள்
அவை தாழ, புரி வெண்நூலர்,
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி, நெடுந்தெருவே
வந்து எனது நெஞ்சம் கொண்டார்,
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி;
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

2

பாதம் தனிப் பார்மேல் வைத்த பாதர்; பாதாளம் ஏழ்
உருவப் பாய்ந்த பாதர்;
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர்; ஏழ் உலகும் ஆய்
நின்ற ஏகபாதர்;
ஓதத்து ஒலி மடங்கி, ஊர் உண்டு ஏறி, ஒத்து உலகம்
எல்லாம் ஒடுங்கிய(ப்)பின்,
வேதத்து ஒலி கொண்டு, வீணை கேட்பார்
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

3

நென்னலை ஓர் ஓடு ஏத்திப் பிச்சைக்கு என்று
வந்தார்க்கு, “வந்தேன்” என்று இல்லே புக்கேன்;
அந் நிலையே நிற்கின்றார்; ஐயம் கொள்ளார்; அருகே
வருவார் போல் நோக்குகின்றார்;
“நும் நிலைமை ஏதோ? நும் ஊர்தான் ஏதோ?”
என்றேனுக்கு ஒன்று ஆகச் சொல்லமாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு
மேவிய விகிர்தனாரே.

4

ஆகத்து உமை அடக்கி, ஆறு சூடி, ஐவாய் அரவு
அசைத்து, அங்கு ஆன் ஏறு ஏறி,
போகம் பல உடைத்து ஆய்ப் பூதம் சூழ, புலித்தோல்
உடையாப் புகுந்து நின்றார்;
பாகு இடுவான் சென்றேனைப் பற்றி நோக்கி, பரிசு
அழித்து, என் வளை கவர்ந்தார், பாவியேனை;
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு
மேவிய விகிர்தனாரே.

5

கொள்ளைக் குழைக் காதின் குண்டைப்பூதம்
கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட,
உள்ளம் கவர்ந்திட்டுப் போவார் போல உழிதருவர்;
நான் தெரியமாட்டேன், மீண்டேன்;
கள்ளவிழி விழிப்பார், காணாக் கண்ணால்;
கண்ணுளார் போலே கரந்து நிற்பர்;
வெள்ளச் சடைமுடியர்; வேத நாவர் வெண்காடு
மேவிய விகிர்தனாரே.

6

தொட்டு இலங்கு சூலத்தர்; மழுவாள் ஏந்தி, சுடர்க்
கொன்றைத்தார் அணிந்து, சுவைகள் பேசி,
பட்டி வெள் ஏறு ஏறி, பலியும் கொள்ளார்;
பார்ப்பாரைப் பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால்;
கட்டு இலங்கு வெண்நீற்றர்; கனலப் பேசிக் கருத்து
அழித்து வளை கவர்ந்தார்; காலை மாலை
விட்டு இலங்கு சடைமுடியர்; வேத நாவர் வெண்காடு
மேவிய விகிர்தனாரே.

7

பெண்பால், ஒருபாகம்; பேணா வாழ்க்கை; கோள்
நாகம் பூண்பனவும்; நாண் ஆம் சொல்லார்;
உண்பார், உறங்குவார், ஒவ்வா; நங்காய்! உண்பதுவும்
நஞ்சு அன்றே, உலோபி! உண்ணார்;
பண்பால் அவிர்சடையர் பற்றி நோக்கி, பாலைப்
பரிசு அழிய, பேசுகின்றார்
விண்பால் மதி சூடி, வேதம் ஓதி, வெண்காடு
மேவிய விகிர்தனாரே.

8

மருதங்களா மொழிவர், மங்கையோடு; வானவரும்
மால் அயனும் கூடி, தங்கள்
சுருதங்களால்-துதித்து, தூநீர் ஆட்டி, தோத்திரங்கள்
பல சொல்லி, தூபம் காட்டி,
“கருதும் கொல் எம்பிரான், செய் குற்றேவல்?”
என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து,
விகிர்தங்களா நடப்பர், வெள் ஏறு ஏறி; வெண்காடு
மேவிய விகிர்தனாரே.

9

புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார்,
பொறி அழல் ஆய் நின்றான் தன்னை;
உள்ளானை; ஒன்று அல்லா உருவினானை; உலகுக்கு
ஒரு விளக்கு ஆய் நின்றான் தன்னை;
கள் ஏந்து கொன்றை தூய், காலை மூன்றும் ஓவாமே,
நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார்
வெண்காடு மேவிய விகிர்தனாரே.

10

மாக் குன்று எடுத்தோன்தன் மைந்தன் ஆகி மா
வேழம் வில்லா மதித்தான் தன்னை
நோக்கும் துணைத் தேவர் எல்லாம் நிற்க
நொடிவரையில் நோவ விழித்தான் தன்னை;
காக்கும் கடல் இலங்கைக் கோமான் தன்னைக்
கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி,
வீக்கம் தவிர்த்த விரலார்போலும் வெண்காடு
மேவிய விகிர்தனாரே.