பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கோடிகா
வ.எண் பாடல்
1

கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்;
கல் மதில் சூழ் கந்த மாதனத்தான் கண்டாய்;
மண்தலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய்;
மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்;
விண்தலம் சேர் விளக்கு ஒளி ஆய் நின்றான்
கண்டாய்; மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்;
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன்
கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

2

வண்டு ஆடு பூங்குழலாள் பாகன் கண்டாய்;
மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்;
பண்டு ஆடும் பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்;
பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்;
செண்டு ஆடி அவுணர் புரம் செற்றான் கண்டாய்;
திரு ஆரூர்த் திருமூலட்டானன் கண்டாய்;
கொண்டாடும் அடியவர் தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

3

அலை ஆர்ந்த புனல் கங்கைச் சடையான் கண்டாய்;
அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனான் கண்டாய்;
மலை ஆர்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்;
வானோர்கள் முடிக்கு அணி ஆய் நின்றான் கண்டாய்;
இலை ஆர்ந்த திரிசூலப்படையான் கண்டாய்; ஏழ்
உலகும் ஆய் நின்ற எந்தை கண்டாய்;
கொலை ஆர்ந்த குஞ்சரத் தோல் போர்த்தான்
கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

4

மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய்;
மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய்;
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய்;
பூந்துருத்திப் பொய் இலியாய் நின்றான் கண்டாய்;
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய்;
ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்;
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

5

வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்;
மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்;
போர் ஆர்ந்த மால்விடை ஒன்று ஊர்வான்
கண்டாய்; புகலூரை அகலாத புனிதன் கண்டாய்;
நீர் ஆர்ந்த நிமிர்சடை ஒன்று உடையான் கண்டாய்;
நினைப்பார் தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்;
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

6

கடி மலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்;
கண் அப்ப விண் அப்புக் கொடுத்தான் கண்டாய்;
படி மலிந்த பல்பிறவி அறுப்பான் கண்டாய்; பற்று
அற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்;
அடி மலிந்த சிலம்பு அலம்பத் திரிவான் கண்டாய்;
அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய்;
கொடி மலிந்த மதில்-தில்லைக் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

7

உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய்;
ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய்;
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய்;
காளத்திக் கற்பகம் ஆய் நின்றான் கண்டாய்;
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய்;
என் நெஞ்சத்துள்-நீங்கா எம்மான் கண்டாய்;
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.

8

படம் ஆடு பன்னகக்கச்சு அசைத்தான் கண்டாய்;
பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்;
நடம் ஆடி ஏழ் உலகும் திரிவான் கண்டாய்;
நால்மறையின் பொருள் கண்டாய்; நாதன் கண்டாய்;
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய்;
கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்;
குடம் ஆடி இடம் ஆகக் கொண்டான் கண்டாய்
கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.