பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஏழாம் தந்திரம் / பூரணக் குகை நெறிச் சமாதி
வ.எண் பாடல்
1

வளர் பிறையில் தேவர் தம் பாலின் மன்னி
உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கித்
தளர்வு இல் பிதிர் பதம் தங்கிச் சசியுள்
உளது உறும் யோகி உடல் விட்டால் தானே.

2

தான் இவை ஒக்கும் சமாதி கை கூடாது
போன வியோகி புகல் இடம் போந்து பின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வார் அருளின் சார்வாகியே.

3

தான் இவ்வகையே புவியோர் நெறி தங்கி
ஆன சிவயோகத்து ஆம் ஆறு அவ்விந்து
தான் அதில் அந்தச் சிவ யோகி ஆகு முன்
ஊனத்தோர் சித்தி வந்தோர் காயம் ஆகுமே.

4

சிவயோகி ஞானி சிதைந்து உடல் விட்டால்
தவ லோகம் சேர்ந்து பின் தான் வந்து கூடிச்
சிவ யோக ஞானத்தால் சேர்ந்து அவர் நிற்பர்
புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே.

5

ஊனம் இல் ஞானி நல் யோகி உடல் விட்டால்
தான் அற மோனச் சமாதியுள் தங்கியே
தான் அவன் ஆகும் பரகாயம் சாராதே
ஊனம் இல் முத்தராய் மீளார் உணர்வு உற்றே.

6

செத்தார் பெறும் பயன் ஆவது ஏது எனில்
செத்து நீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவம் ஆகியே சித்தர் தாமே.

7

உன்னக் கருவிட்டு உரவோன் அரன் அருள்
பன்னப் பரனே அருள் குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி
தன் இச்சைக்கு ஈசன் உருச் செய்யும் தானே.

8

எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்கு எங்கும் ஆம் தற்பரம்
அங்கு ஆங்கு என நின்று சகம் உண்ட வான் தோய்தல்
இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே.