பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / முச்சூனிய தொந்தத் தசி
வ.எண் பாடல்
1

தற்பதம் தொம் பதம் தான் ஆம் அசி பதம்
தொற்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே
நிற்பது உயிர் பரன் நிகழ் சிவமும் மூன்றின்
சொல் பதம் ஆகும் தொந்தத் தசியே.

2

தொந்தத் தசி மூன்றில் தொல் காமியம் ஆதி
தொந்தத் தசி மூன்றில் தொல் தாமதம் ஆதி
வந்த மலம் குணம் மாளச் சிவம் தோன்றின்
இந்துவின் முன் இருள் ஏகுதல் ஒக்குமே.

3

தொந்தத் தசியை அவ் வாசியில் தோற்றியே
அந்த முறை ஈர் ஐந்து ஆக மதித்து இட்டு
அந்தம் இலாத அவத்தை அவ்வாக்கியத்து
உந்து முறையில் சிவ முன் வைத்து ஓதிடே.

4

வைத்துச் சிவத்தை மதி சொரு பானந்தத்து
உய்த்துப் பிரணவம் ஆம் உபதேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து
அத்தற்கு அடிமை அடைந்து நின்றானே.

5

தொம் பதம் மாயை உள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும் அவ் வாக்கியம்
உம்பர் உரை தொந்தத் தசி வாசி ஆமே.

6

ஆகிய அச்சோயம் தேவதத் தன்னிடத்து
ஆகிய வை விட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொந்தத் தசி என்ப மெய் அறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே.

7

தாமத காமியம் ஆகித் தகுகுண
மா மலம் மூன்றும் அகார உகாரத்தோடு
ஆமறும் அவ்வும் அவ் வாயுடன் மூன்றில்
தாம் ஆம் துரியமும் தொந்தத் தசி அதே.