பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
போது உகந்து ஏறும் புரிசடையான் அடி யாது உகந்தார் அமரா பதிக்கே செல்வர் ஏது உகந்தான் இவன் என்று அருள் செய்திடும் மாது உகந்து ஆடிடும் ஆல் விடையோனே.
பற்றிப் பதத்து அன்பு வைத்துப் பரன்புகழ் கற்று இருந்து ஆங்கே கருதும் அவர்கட்கு முற்று எழுந்து ஆங்கே முனிவர் எதிர்வரத் தெற்றும் சிவபதம் சேரலும் ஆமே.
வருந்தித் தவம் செய்து வானவர் கோவாய்த் திருந்து அமராபதிச் செல்வன் இவன் எனத் தரும் தண் முழவம் குழலும் இயம்ப இருந்து இன்பம் எய்துவர் ஈசன் அருளே.
செம் பொன் சிவகதி சென்று எய்தும் காலத்துக் கும்பத்து அமரர் குழாம் வந்து எதிர் கொள்ள எம் பொன் தலைவன் இவனாம் எனச் சொல்ல இன்பக் கலவி இருக்கலும் ஆமே.
சேர் உறு காலத்து இசை நின்ற தேவர்கள் ஆர் இவன் என்ன அரனாம் இவன் என்ன ஏர் உறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக் கார் உரு கண்டனை மெய் கண்டவாறே.
நல்வழி நாடி நமன் வழி மாற்றிடும் சொல் வழியாளர் சுருங்காப் பெரும் கொடை இல்வழி யாளர் இமையவர் எண்திசைப் பல்வழி எய்தினும் பார்வழி ஆகுமே.
தூங்க வல்லார்க்கும் துணை ஏழ் புவனமும் வாங்க வல்லார்க்கும் வலிசெய்து நின்றிடும் தேங்க வல்லார்க்கும் திளைக்கும் அமுதமும் தாங்க வல்லார்க்கும் தன் இடம் ஆமே.
காரியம் ஆன உபாதியைத் தான் கடந்து ஆரிய காரணம் ஏழும் தன்பால் உற ஆரிய காரணம் ஆய தவத்து இடைத் தாரியல் தற்பரம் சேர்தல் சமாதியே.