பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நக்கீரதேவ நாயனார் / கார் எட்டு
வ.எண் பாடல்
1

அரவம்அரைக்கசைத்த அண்ணல் சடைபோல்
விரவிஎழுந்தெங்கும் மின்னி, - அரவினங்கள்
அச்சங்கொண் டோடி அணைய அடைவுற்றே
கைச்சங்கம் போல்முழங்குங் கார்.

2

மையார் மணிமிடறு போற்கருகி மற்றவன்தன்
கையார் சிலை விலகிக் காட்டிற்றே - ஐவாய்
அழலரவம் பூண்டான் அவிர்சடைபோல் மின்னிக்
கழலரவம் காண்புற்ற கார்.

3

ஆலமர் கண்டத் தரன்தன் மணிமிடறும்
கோலக் குழற்சடையும், கொல்லேறும் - போல்வ,
இருண்டொன்று மின்தோன்றி அம்பொன்றவ் வானம்
கருண்டொன்று கூடுதலின் கார்.

4

இருள்கொண்ட கண்டத் திறைவன்தன் சென்னிக்
குருள்கொண்ட செஞ்சடைபோல் மின்னிச் - சுருள்கொண்டு
பாம்பினங்கள் அஞ்சிப் படம்ஒடுங்க ஆர்த்ததே
காம்பினங்கள் தோள்ஈயக் கார்.

5

கோடரவங் கோடல் அரும்பக் குருமணிகான்(று)
ஆடரவம் எல்லாம் அளையடைய - நீடரவப்
பொற்பகலம் பூண்டான் புரிசடைபோல் மின்னிற்றே
கற்பகலம் காண்புற்ற கார்.

6

பாரும், பனிவிசும்பும், பாசுபதன் பல்சடையும்
ஆரும் இருள்கீண்டு மின்விலகி - ஊரும்;
அரவம் செலஅஞ்சும்; அஞ்சொலார் காண்பார்
கரவிந்தம் என்பார்அக் கார்.

7

செழுந்தழல் வண்ணன் செழுஞ்சடைபோல் மின்னி,
அழுந்தி, அலர்போல் உயர - எழுந்தெங்கும்
ஆவிசோர் நெஞ்சினரை அன்பளக்க உற்றதே,
காவிசேர் கண்ணாய்அக் கார்.

8

காந்தள் மலரக் கமழ்கொன்றை பொன்சொரியப்
பூந்தளவம் ஆரப் புகுந்தின்றே - ஏந்தொளிசேர்
அண்டம்போல் மீதிருண்ட ஆதியான் ஆய்மணிசேர்
கண்டம்போல் மீதிருண்ட கார்.