பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

முனையடுவார் நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

மாறு கடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திரு நாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய் திறந்து பொழி செழும் தேன்
ஆறு பெருகி வெள்ளம் இடும் அள்ளல் வயலின் மள்ளர் உழும்
சேறு நறும் வாசம் கமழும் செல்வம் நீடூர் திருநீடூர்.

2

விளங்கும் வண்மை மிக்கு உள்ள வேளாண் தலைமைக்குடி முதல்வர்;
களம் கொள் மிடற்றுக் கண் நுதலார் கழலின் செறிந்த காதல் மிகும்
உளம் கொள் திருத்தொண்டு உரிமையினில் உள்ளார்; நள்ளார் முனை எறிந்த
வளம் கொடு இறைவர் அடியார்க்கு மாறாது அளிக்கும் வாய்மையார்.

3

மாற்றார்க்கு அமரில் அழிந்து உள்ளோர் வந்து தம்பால் மா நிதியம்
ஆற்றும் பரிசு பேசினால் அதனை நடுவு நிலை வைத்துக்
கூற்றும் ஒதுங்கும் ஆள் வினையால் கூலி ஏற்றுச் சென்று எறிந்து
போற்றும் வென்றி கொண்டு இசைந்த பொன்னும் கொண்டு மன்னுவார்.

4

இன்ன வகையால் பெற்ற நிதி எல்லாம் ஈசன் அடியார்கள்
சொன்ன சொன்ன படி நிரம்பக் கொடுத்துத் தூய போனகமும்
கன்னல் நறு நெய் கறி தயிர் பால் கனி உள் உறுத்த கலந்து அளித
மன்னும் அன்பின் நெறி பிறழா வழித் தொண்டு ஆற்றி வைகினார்.

5

மற்று இந் நிலைமை பல்நெடு நாள் வையம் நிகழச் செய்து வழி
உற்ற அன்பின் செந்நெறியால் உமையாள் கணவன் திருஅருளால்
பெற்ற சிவலோகத்து அமர்ந்து பிரியா உரிமை மருவினார்
முற்ற உழந்த முனை அடுவார் என்னும் நாமம் முன் உடையார்.

6

யாவர் எனினும் இகல் எறிந்தே ஈசன் அடியார் தமக்கு இன்பம்
மேவ அளிக்கும் முனை அடுவார் விரைப் பூங்கமலக் கழல் வணங்கித்
தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செங்கோல் முறை புரியும்
காவல் பூண்ட கழற் சிங்கர் தொண்டின் நிலைமை கட்டு உரைப்பாம்.

7

சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி
செறிவு உண்டு என்று திருத்தொண்டில் சிந்தை செல்லும் பயனுக்கும்
குறி உண்டு ஒன்றுஆகிலும் குறை ஒன்று இல்லோம் நிறையும் கருணையினால்
வெறி உண் சோலைத் திருமுருகன் பூண்டி வேடர் வழிபறிக்க.
பறி உண்டவர் எம் பழவினை வேர் பறிப்பார் என்னும் பற்றாலே.